ஐபிஎல்: மும்பை அணி 187 ரன்கள் குவிப்பு!
பாண்டியா 11 பந்துகளில் 3 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்...
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்துள்ளது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. முந்தைய ஆட்டத்தில் காயம் காரணமாக பங்கேற்காமல் இருந்த மும்பை கேப்டன் ரோஹித் சர்மா, இந்த ஆட்டத்தில் விளையாடி வருகிறார். மும்பையில் நடைபெறும் இந்த ஆட்டத்தைக் காண 21,000 அடித்தட்டு மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் அணியில் லியம் லிவிங்ஸ்டோன், கெளதம் போன்றோரும் மும்பை அணியில் ரோஹித் சர்மா இந்த ஆட்டத்தில் இடம்பெற்றுள்ளார்கள்.
மும்பை அணி முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் எடுத்தது. கெளதம் வீசிய 2-வது ஓவரில் 18 ரன்களும் 3-வது ஓவரில் 10 ரன்களும் எடுத்தது மும்பை. பிறகு, 32 பந்துகளில் 47 ரன்களை எடுத்த ரோஹித் சர்மா, ஆர்ச்சர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சூர்யகுமார் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பொலார்ட், 12 பந்துகளில் 6 ரன்களை எடுத்து ஆர்ச்சர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 34 பந்துகளில் அரை சதமெடுத்த டி காக், பிறகு 52 பந்துகளில் 81 ரன்களில் 19-வது ஓவரில் ஆட்டமிழந்தார். இவருடைய விக்கெட்டையும் ஆர்ச்சர் வீழ்த்தினார். கடைசிக்கட்டத்தில் பாண்டியா சிக்ஸர்கள் அடித்து மும்பை ரசிகர்களைக் குஷிப்படுத்தினார். கடைசி ஓவரில் இஷான் கிஷன் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த ஓவரில் மும்பை அணிக்கு 16 ரன்கள் கிடைத்தது. கடைசி 5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 61 ரன்கள் எடுத்தது. பாண்டியா 11 பந்துகளில் 3 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்துள்ளது.