அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார் பஞ்சாப் அணி கேப்டன் கே.எல். ராகுல்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 18-ஆவது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாபை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பா் கிங்ஸ் அபார வெற்றி பெற்றது.
துபையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய சென்னை 17.4 ஓவா்களில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் அடித்து வென்றது. ஷேன் வாட்சன் - டு பிளெசிஸ் கூட்டணி அபாரமாக ஆடி அணியின் வெற்றிக்கு வழி வகுத்தது.
இந்த ஆட்டத்தில் பஞ்சாப் கேப்டன் கே.எல். ராகுல் சிறப்பாக விளையாடி 63 ரன்கள் எடுத்தார். மயங்க் அகர்வால் 26 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார் ராகுல். ஒரு சதம் இரு அரை சதங்களுடன் 302 ரன்கள் எடுத்து அவர் முதலிடத்தில் உள்ளார். 2-ம் இடத்தில் சிஎஸ்கேவின் டு பிளெசிஸ் 282 ரன்களுடன் உள்ளார். 272 ரன்களுடன் மயங்க் அகர்வால் 3-ம் இடத்துக்கு இறங்கியுள்ளார்.
பஞ்சாப் அணி இந்த வருட ஐபிஎல் போட்டியில் மோசமாக விளையாடி வருகிறது. புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. எனினும் ராகுலும் மயங்க் அகர்வாலும் சிறப்பாக விளையாடி வருவதால் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்கள்.