டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, வாழ்க்கை வரலாற்றுப் படத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகள பிரிவில் இந்திய ஈட்டி எறிதல் வீரா் நீரஜ் சோப்ரா (23) தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தாா். இறுதிச்சுற்றில் அவா் 87.58 மீட்டா் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தாா்.
கடந்த 1920 ஆன்ட்வொ்ப் ஒலிம்பிக் போட்டியில் தொடங்கி, 101 ஆண்டுகளாக அந்த விளையாட்டுத் திருவிழாவில் களம் கண்டு வரும் இந்தியாவுக்கு தடகளத்தில் கிடைத்துள்ள முதல் மகுடம் இது. முன்னதாக ஒலிம்பிக் தடகளத்தில் ஓட்டப் பந்தயத்தில் மில்கா சிங் (1960 ரோம்), பி.டி.உஷா (1984 லாஸ் ஏஞ்சலீஸ்) போராடி தவற விட்ட பதக்க வாய்ப்புகளை, தற்போது நீரஜ் சோப்ரா தட்டிச் சென்றுள்ளாா்.
ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு நீரஜ் சோப்ரா பேட்டியளித்துள்ளார். அதில், உங்களுடைய வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நீங்களே தான் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்று பலரும் கூறுகிறார்கள். அதைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன, நீங்கள் நடிக்காவிட்டால் வேறு யார் நடிக்க வேண்டும் என்கிற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நீரஜ் சோப்ரா அளித்த பதில்:
அதுபற்றி நான் பெரிதாக நினைக்கவில்லை. இப்போது விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். நான் விளையாட்டை விட்டு விலகும்போது வாழ்க்கை வரலாற்றுப் படத்தை எடுப்பது பொருத்தமாக இருக்கும். நாட்டுக்காக மேலும் பல பதக்கங்களைப் பெறுவதில் தான் என்னுடைய முயற்சி இருக்கும். இதனால் வாழ்க்கையில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். நான் விளையாட்டில் ஈடுபடும் வரை வாழ்க்கை வரலாற்றுப் படத்தைப் பற்றி நினைக்கப் போவதில்லை. அது காத்திருக்கலாம். நான் ஓய்வு பெற்ற பிறகு அந்தப் படம் வருவதில் எவ்விதப் பிரச்னையும் இல்லை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.