முகப்பு
செய்திகள்

3-வது டெஸ்ட்: நியூஸிலாந்துக்கு 475 ரன்கள் இலக்கு! புஜாரா அபார சதம்!

3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து வெற்றி பெற 475 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்தியா.

Updated On : 11 அக்டோபர், 2016 at 1:36 PM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 10:13 AM

3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து வெற்றி பெற 475 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்தியா. புஜாரா அற்புதமாக விளையாடி சதம் எடுத்தார். 

இந்தூரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 557 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பிறகு ஆடிய நியூஸிலாந்து அணி, 299 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி ஃபாலோ ஆன் ஆனது. அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்தியா 258 ரன்கள் முன்னிலை பெற்று மீண்டும் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது.

3-ம் நாள் ஆட்ட முடிவில், இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 18 ரன்கள் எடுத்தது. காயம் காரணமாக கம்பீர் பாதியிலேயே வெளியேறினார்.

Advertisement

4-ம் நாளான இன்று விஜய்யும் புஜாராவும் ஆட்டத்தைத் தொடங்கினார்கள். நம்பிக்கையுடன் ஆடிவந்த விஜய், 19 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து நேற்று காயம் காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறிய கம்பீர் மீண்டும் விளையாட வந்தார். சூழ்நிலையைப் புரிந்து இந்திய வீரர்கள் மிகவும் வேகமாக ஆடினார்கள். அதிலும் கம்பீர் சரியான இடைவெளியில் தொடர்ந்து பவுண்டரிகள் அடித்தார். அவர் 56 பந்துகளில் அரை சதம் அடித்து அவுட் ஆனார். இந்திய அணிக்குள் மீண்டும் நுழைந்துள்ள கம்பீருக்கு இந்த ஆட்டம் திருப்புமுனையாகும். அடுத்தத் தொடரில் நிச்சயம் இடம்பெறுவார் என்கிற நம்பிக்கையை இந்த ஆட்டம் வெளிப்படுத்தியுள்ளது. மறுமுனையில் புஜாராவும் ஓரளவு வேகமாக ஆடி, 96 பந்துகளில் அரை சதம் எடுத்தார்.

உணவு இடைவேளையின்போது இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்தது. அப்போது, ஒட்டுமொத்தமாக 385 ரன்கள் முன்னிலை பெற்று மிகவும் வலுவான நிலையில் இருந்தது. 

அதன்பிறகு இந்திய வீரர்கள் வேகமாக ரன்கள் அடிப்பதிலேயே குறியாக இருந்தார்கள். கோலி 17 ரன்களில் படேலின் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார். அதன்பிறகு புஜாராவுடன் ஜோடி சேர்ந்த ரஹானா அவரும் தன் பங்குங்கு ரன் வேட்டையைத் தொடர்ந்தார்.

மிகவும் நிதானமாக ஆடுகிறார் என்று குற்றம்சாட்டப்பட்ட புஜாரா, இந்த இன்னிங்ஸில் மிக வேகமாக ஆடி ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார். 148 பந்துகளில் சதம் எடுத்தார் புஜாரா. இது அவருடைய 8-வது டெஸ்ட் சதமாகும். புஜாரா சதம் எடுத்தவுடன் 3 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தார் கோலி. இதனால் நியூஸிலாந்து அணிக்கு 475 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.