செய்திகள்

தம்பி வா, தலைமையேற்க வா: மகுடம் சூட இருக்கும் விராட் கோலி!

அடுத்த உலகக்கோப்பைக்கான இந்திய அணியைக் கட்டமைக்கும் பொறுப்பு கோலிக்கு வழங்கப்படவுள்ளது.

ச. ந. கண்ணன்

ஒருநாள் போட்டி மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக மஹேந்திர சிங் தோனி (35) புதன்கிழமை அறிவித்தார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ள இந்திய அணி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படவுள்ள நிலையில், தோனி இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார். கேப்டன் பதவியிலிருந்து விலகினாலும், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுவதற்கு தோனி தயாராக இருக்கிறார் என பிசிசிஐ புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் போட்டியிலிருந்து 2014 டிசம்பரில் தோனி ஓய்வு பெற்றார். அவருடைய தலைமையில் இந்தியா 27 வெற்றி, 18 தோல்விகளை சந்தித்துள்ளது. 15 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.

இந்திய டெஸ்ட் அணிக்கு தலைமை வகித்து வரும் விராட் கோலி, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் கேப்டன் பொறுப்பையும் ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் தொடர் வரும் 15-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான அணி நாளை தேர்வாக உள்ளது. இதில் விராட் கோலி, ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான கேப்டனாக நியமிக்கப்பட உள்ளார். 

இந்தவருடம் இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடைபெற உள்ளது. அதுவரை தோனி கேப்டனாக நீடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த திடீர் அறிவிப்பு வெளிவந்துள்ளது. தோனியின் பதவி விலகல் குறித்து கிரிக்கெட் வர்ணையாளர் ஹர்ஷா போக்ளே கூறும்போது, எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு தோனி இந்தச் சரியான முடிவை எடுத்துள்ளார். கடந்த வருடத்தில் இந்திய அணி, கோலி அணியாக மாறியுள்ளது என்று கூறியுள்ளார். அது மிகச்சரியே. 

தேர்வுக்குழுவும் கோலிக்குச் சாதகமாக முடிவெடுக்கும் நிலையில் உள்ளதால் அவர்களுக்குச் சிரமம் வைக்காமல் பதவியிலிருந்து விலகியுள்ளார் தோனி. இத்தனைக்கும் 199 ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாகப் பதவி வகித்த தோனி, சுயநலமின்றி 200 போட்டிகள் என்கிற சாதனைக்கு ஆசைப்படாமல் இந்த முடிவை எடுத்துள்ளார்.

இதனால் அடுத்த உலகக்கோப்பைக்கான இந்திய அணியைக் கட்டமைக்கும் பொறுப்பு கோலிக்கு வழங்கப்படவுள்ளது. அணியை வழிநடத்திச் செல்கிற அருமையான சூழல் அவருக்கு உருவாகியுள்ளது. 

அடுத்த உலகக்கோப்பை வரை விளையாட தோனி விருப்பம் தெரிவித்துள்ளதால், அது கோலிக்கு மேலும் ஒரு வலுவான இந்திய அணியை உருவாக்கப் பயனளிக்கும். இன்னமும் கடைசி ஓவர்களில் வேகமாக ரன்களைக் குவிக்கும் வீரரை இந்திய அணி கண்டடையவில்லை. இதனால் தோனியின் தேவை அணிக்கு அவசியமாக உள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு கேப்டனாகவும் தன்னை வலுவாக நிரூபித்துள்ளார் விராட் கோலி. அதன் அடிப்படையில், இப்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் சாதித்துக்காட்ட ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வருடம் சாம்பியன்ஸ் டிராபி, 2018-ல் டி20 உலகக்கோப்பை, 2019-ல் ஒருநாள் உலகக்கோப்பை, 2020-ல் டி20 உலகக்கோப்பை என அடுத்த மூன்று வருடங்களில் நான்கு முக்கியமான போட்டிகள் உள்ளன. இந்திய அணிக்குத் தலைமையேற்று, அணியை வெற்றியுடன் வழிநடத்துகிற பெருமைமிக்க கேப்டன் பொறுப்பு நாளை கோலி கையில் வழங்கப்பட உள்ளது. இந்திய கிரிக்கெட்டும் கேப்டன் தோனி அல்லாத அடுத்தக்கட்டத்துக்கு நகர்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT