ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் 18-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார் ஃபெடரர்.
20-ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த வீரரான ஃபெடரர், இன்றளவிலும் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.
மெல்போர்னில் ஞாயிற்றுக்கிழமை 3 மணி, 37 நிமிடங்கள் நடைபெற்ற இறுதிச் சுற்றில் ரோஜர் ஃபெடரர் 6-4, 3-6, 6-1, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் ரஃபேல் நடாலை தோற்கடித்தார்.
பரிசளிப்பு விழாவில் ஃபெடரர், நடால் ஆகிய இருவரும் மிகுந்த தோழமை உணர்வுடன் நடந்துகொண்டார்கள். அவர்கள் இருவருடைய பேச்சும் அனைவரையும் மிகவும் கவந்தன.
ஆஸ்திரேலிய ஓபனில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் ஃபெடரர் கூறியதாவது: மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. இந்த நேரத்தில் மீண்டும் உச்சகட்ட ஃபார்முக்கு திரும்பியிருக்கும் நடாலுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் இருவரும் கிராண்ட்ஸ்லாம் போட்டியின் இறுதிச் சுற்றில் மீண்டும் விளையாடுவோம் என நான் நம்பவில்லை. நடாலும் நம்பியிருக்கமாட்டார் என்றே நினைக்கிறேன். இந்த ஆட்டத்தில் நடாலிடம் தோற்றிருந்தாலும்கூட மகிழ்ச்சியாகத்தான் இருந்திருப்பேன். டென்னிஸ் மிகக் கடினமான விளையாட்டு. இங்கு டிரா என்பது கிடையாது. வெற்றி அல்லது தோல்வி மட்டும்தான். தொடர்ந்து சிறப்பாக விளையாடுங்கள் நடால். டென்னிஸுக்கு நீங்கள் தேவை என்றார்.
நடால் பேசுகையில், "நீண்ட நாள்களுக்குப் பிறகு ஃபெடரர் சிறப்பாக ஆடிய விதம் வியப்பாக இருக்கிறது. அதற்காக அவர் கடுமையாக உழைத்திருப்பார். அவருடைய ஆட்டம் மகிழ்ச்சியளிக்கிறது. எனக்கு இந்த மாதம் சிறப்பான ஒன்றாகும். மிகவும் ரசித்து விளையாடினேன். கடுமையான பயிற்சியின் காரணமாக இப்போது இறுதிச்சுற்று வரை வந்திருக்கிறேன். இந்த சாம்பியன் பட்டத்துக்கு ஃபெடரர் என்னைவிட தகுதியானவர். நான் உச்சகட்ட ஃபார்முக்கு வந்திருப்பதைப் போன்று உணர்கிறேன். இந்த சீசனில் தொடர்ந்து அபாரமாக ஆட முயற்சிப்பேன்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.