செய்திகள்

இந்தியாவின் தோல்விக்கு தோனியை மட்டும் குறை சொல்வது ஏன்?: எரிச்சலடையும் கவாஸ்கர்!

எழில்

இந்திய அணி 2-வது டி20 போட்டியில் தோல்வியடைந்ததற்கு தோனியை மட்டும் குறை சொல்வது ஏன் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். 

இந்தியா- நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடரின் கடைசி ஆட்டம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறுகிறது. மொத்தம் 3 ஆட்டங்களைக் கொண்ட இந்தத் தொடர், இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றதை அடுத்து சமநிலையில் உள்ளது. எனவே, கடைசி ஆட்டத்தில் வென்று எந்த அணி தொடரைக் கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மேலோங்கியுள்ளது.

2-வது டி20 போட்டியில் தோனி 49 ரன்கள் எடுத்தபோதும் அவர் விளையாடிய விதம் விமரிசனங்களை வரவழைத்துள்ளது. இதனால் தோனியை அணியிலிருந்து நீக்கவேண்டும் என்கிற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

முன்னாள் வீரர் லட்சுமணன், ஒரு பேட்டியில், தோனி குறித்து கூறியதாவது:

டி20 போட்டிகளில் 4-ம் நிலையில் களமிறங்கவேண்டியது தோனியின் கடமை. ஆனால் அதிரடியாக ஆட தோனிக்குச் சிறிது நேரம் தேவைப்படுகிறது. 2-வது டி20 போட்டியில் கோலி 160 ஸ்டிரைக் ரேட்டில் ஆடிக்கொண்டிருந்தபோது தோனி 80 ஸ்டிரைக் ரேட் தான் வைத்திருந்தார். ஒரு பெரிய இலக்கை விரட்டும்போது இது போதாது. டி20 போட்டிகளில் இளைஞருக்கு வாய்ப்பு தரவேண்டிய நிலையில் தோனி உள்ளார் என நினைக்கிறேன். வாய்ப்புகள் கிடைக்கும் இளைஞர், சர்வதேச கிரிக்கெட்டில் நம்பிக்கையுடன் முன்னேறுவார். தோனி, ஒருநாள் அணியின் திட்டங்களில் நிச்சயம் உள்ளார். 2-வது டி20 போட்டி, தோனியின் தடுமாற்றங்களை வெளிப்படுத்தியுள்ளது. அது ஓர் உதாரணம் என்று கூறியுள்ளார்.

முன்னாள் வீரர் அஜித் அகர்கர், கிரிக்இன்ஃபோ பேட்டியில் கூறியதாவது: 

இந்தியா தற்போது வேறு யோசனைகளைச் செயல்படுத்தவேண்டும். குறைந்தபட்சம் டி20யிலாவது. ஒருநாள் கிரிக்கெட்டில் தோனியின் பேட்டிங்கில் இந்திய அணிக்குத் திருப்தியாக உள்ளது என நினைக்கிறேன். ஒரு கேப்டனாக இருந்தால் அவர் அணியில் இல்லாததை நம்மால் உணரமுடியும். ஆனால் ஒரு வீரராக தோனி அணியில் இல்லையென்றால் அவரைத் தவறவிடுவீர்களா என்று கேட்டால் இல்லை என்பேன். டி20 அணியில் தோனியைத் தாண்டி ஏராளமான அனுபவசாலிகள் உள்ளார்கள். 

தோனி, அதிரடியாக ஆட சிறிது நேரம் எடுத்துக்கொள்கிறார். டி20யில் அந்தளவுக்கு வாய்ப்புகள் இல்லை. வேறு நிலைகளில் இருந்து அவர் ஆடவேண்டும் என்று மக்கள் சொல்வதைக் கேட்டுள்ளேன். ஆனால் இந்தப் போட்டியில் அவர் 10-வது ஓவரில் விளையாட வந்தார். இதுபோல எத்தனை முறை இப்படிப்பட்ட வாய்ப்புகள் கிடைக்கும்? அவர் திறமையை வெளிப்படுத்த நிறைய நேரம் இருந்தது என்றார்.

முன்னாள் வீரரும் கிரிக்கெட் நிபுணருமான சுனில் கவாஸ்கர், தோனிக்கு ஆதரவாகத் தன் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார். முன்னாள் வீரர்களின் பேட்டி குறித்து அவர் கூறியதாவது:

லட்சுமணன், அகர்கள் ஆகியோர் அவர்கள் கருத்துகளைச் சொல்ல உரிமையுள்ளவர்கள். இந்திய அணிக்காகப் பல போட்டிகளில் விளையாடியுள்ளார்கள். இது அவர்களுடைய கருத்து. அவர்களுடைய கருத்து கேப்டன், தேர்வுக்குழுவின் கருத்துகளோடு ஒத்துக்கொள்ளவேண்டியதில்லை. நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். 30 வயதை ஒருவர் தாண்டிவிட்டால் உடனே அவருடைய தவறைக் கண்காணிக்க ஆரம்பித்துவிடுவோம். ஒருவரிடம் அதிகபட்சமாக எதிர்பார்ப்பதால் அவருடைய ஓய்வை நாம் துரிதப்படுத்துகிறோம் என்று கூறியுள்ளார் கவாஸ்கர். 

இந்நிலையில் முன்னாள் வீரர் சேவாக், தோனியின் டி20 ஆட்டம் குறித்துக் கூறியதாவது:

தனக்கான பொறுப்புகள் என்ன என்பதை தோனி உணர வேண்டும். பெரிய இலக்கை விரட்டும்போது ஆட்டத்தின் போக்கை ஆரம்பத்திலிருந்தே அவர் மாற்றவேண்டும். முதல் பந்திலிருந்து அடித்தாடவேண்டும். இந்திய அணி நிர்வாகம் இதை அவருக்கு உணர்த்த வேண்டும். ஆனால் டி20 கிரிக்கெட்டிலும் கோலி அணிக்கு தோனி தேவைப்படுகிறார். சரியான நேரத்தில் டி20 போட்டியிலிருந்து தோனி விலகுவார். எந்த ஒரு இளம் வீரருக்கும் இடைஞ்சலாக இருக்கமாட்டார் என்று கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரின் 2-ஆவது ஆட்டத்தில் நியூஸிலாந்து 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 3 ஆட்டங்களைக் கொண்ட தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையே சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது.

இதில் மட்டும் தோனியை மட்டும் குறை சொல்லவேண்டாம் என்கிறார் கவாஸ்கர். இது குறித்து அவர் கூறியதாவது:

2-வது டி20 போட்டியில் நாம் மற்றவர்களுடைய தவறுகளை அலச மறுக்கிறோம். ஹார்திக் பாண்டியாவின் விக்கெட்டை நாம் பேசுவதில்லை. தொடக்க வீரர்கள் சரியான தொடக்கத்தை அளிக்கவில்லை. அதைப் பற்றி நாம் பேசுவதில்லை. ஆனால், தோனியின் தவறுகளை மட்டும் பேசுகிறோம். இது துரதிர்ஷ்டவசமானது. இதுதான் இந்தியா என்று தோனிக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

SCROLL FOR NEXT