தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 61-ஆவது தேசிய துப்பாக்கிச் சண்டை போட்டியில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷர்துல் விஹான் (14), ஒரே நாளில் 4 தங்கப் பதக்கங்களை வென்றார்.
டாக்டர் கர்னி சிங் துப்பாக்கிச்சுடுதல் மையத்தில், சீனியர், ஜூனியர் ஆடவர் 'டபுள் டிராப்' தனிநபர் பிரிவிலும், குழுப் பிரிவிலும் ஷர்துல் விஹான் 4 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை புரிந்தார்.
முன்னதாக, ஜூனியர் ஆடவர் 'டபுள் டிராப்' பிரிவில் 77 புள்ளிகள் பெற்று ஷர்துல் தங்கம் வென்றார். உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஷபத் பரத்வாஜ் 74 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கமும், பஞ்சாபின் செஹஜ்ப்ரீத் சிங் 55 புள்ளிகள் பெற்று வெண்கலமும் வென்றனர்.
இந்த ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற உலக ஜூனியர் துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப்பில் ஷர்துல் 6-ஆவது இடம் பிடித்தார்.
ஆசியான் சாம்பியன் போட்டியில் தங்கம் வென்ற அன்வர் சுல்தான், ஷர்துலின் பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.