இந்தியாவில் முதல் முறையாக ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி நடைபெறவுள்ளது. 17 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி வரும் அக்டோபர் 6 முதல் 28-ஆம் தேதி வரையில் இந்தியாவின் 6 நகரங்களில் - நவி மும்பை, புது தில்லி, கோவா, கொச்சி, குவாஹாட்டி, கொல்கத்தா நடைபெறவுள்ளது. இதில், போட்டியை ஒருங்கிணைக்கும் நாட்டின் அணி என்ற முறையில் இந்திய அணி "ஏ' பிரிவில் முதலிடத்தில் உள்ளது. மொத்தம் 24 அணிகள் பங்கேற்கின்றன.
அனைவரும் எதிர்பார்க்கும் இறுதிப் போட்டி கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் அக்டோபர் 28 அன்று நடைபெறவுள்ளது. குவாஹாத்தி மற்றும் நவி மும்பையில் அரையிறுதி ஆட்டங்களும் காலிறுதி ஆட்டங்கள் கோவா, குவாஹாட்டி, கொச்சி, கொல்கத்தா ஆகிய நகரங்களிலும் நடைபெறுகின்றன.
அக்டோபர் 6-ம் தேதி புது தில்லி மற்றும் நவி மும்பை ஆகிய இரு நகரங்களிலும் உலகக் கோப்பை போட்டி தொடங்குகிறது.
ஃபிஃபா 17 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் அதிகாரப்பூர்வ பாடல் வெளியிடப்பட்டது. ப்ரீதம் இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார்.