ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 3 ஒரு நாள் ஆட்டங்களில் இருந்து இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவன் விலகியுள்ளார்.
ஷிகர் தவனின் மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பதால் அவர் விலகியுள்ளார்.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் வரும் 17-ஆம் தேதி தொடங்குகிறது. அதன் முதல் 3 ஆட்டங்களில் இருந்து ஷிகர் தவன் விலகியுள்ளார்.
இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஷிகர் தவனின் மனைவிக்கு உடல் நிலை சரியில்லை. அவரைப் பார்த்துக் கொள்வதற்காக முதல் 3 ஆட்டங்களில் இருந்து தன்னை விடுவிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து அவர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்' என குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் ஷிகர் தவனுக்குப் பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்வதில்லை என பிசிசிஐ தேர்வுக்குழு முடிவெடுத்துள்ளது.
இதற்கு முன்னதாக இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாடியபோது, தவனின் தாய்க்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிரான கடைசி ஒரு நாள் ஆட்டம் மற்றும் டி20 ஆட்டத்திலிருந்து அவர் விலகியது குறிப்பிடத்தக்கது.