இலங்கை அணியின் புதிய தேர்வுக்குழுத் தலைவர் சனிக்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.
முன்னதாக, இந்திய அணிக்கு எதிரான 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டித் தொடர்களில் அனைத்து போட்டிகளிலும் இலங்கை அணி படுதோல்வியைச் சந்தித்தது.
இது அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. மேலும், அணி வீரர்கள் அடிக்கடி மாற்றப்படுவது தொடர்பாக இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் கடுமையாகச் சாடினார்.
இதனால் வீரர்களிடம் பயம் ஏற்பட்டதாகவும் அதுவே தொடர் தோல்விகளுக்கு காரணம் என்று குற்றஞ்சாட்டினார். கேப்டன்களும் அடுத்தடுத்து மாற்றப்பட்டு வந்தனர்.
எனவே, இதற்கு பொறுப்பேற்று இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவர் பதவியில் இருந்து சனத் ஜெயசூரியா விலகினார். மேலும், அவரது அணியின் கீழ் செயல்பட்ட அனைவரும் பதவி விலகினர்.
இந்நிலையில், இலங்கை அணியின் புதிய தேர்வுக்குழுத் தலைவராக முன்னாள் வீரர் க்ரீம் லேப்ராய் (53 வயது) தேர்வு செய்யப்பட்டார். இதனை இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் திலங்க சுமதிபாலா உறுதிபடுத்தினார்.
லேப்ராய், 1986 முதல் 1992 வரை இலங்கை அணிக்காக 9 டெஸ்ட், 44 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். மொத்தம் 27 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
அதுபோல, முன்னாள் கேப்டன் அரவிந்த டீ சில்வா, இலங்கை அணியின் கிரிக்கெட் தொடர்பான விவகாரங்களை கவனிக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவராக செயல்பட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.