2-வது தங்கம் வென்றது இந்தியா: பளு தூக்குதலில் சஞ்சிதா சானு சாதனை!
இந்தியாவுக்கு பளு தூக்குதல் பிரிவில் மற்றொரு தங்கம் கிடைத்துள்ளது. 53 கிலோ எடைப் பிரிவில்...
21-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், ஆஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட் நகரில் புதன்கிழமை தொடங்கியது. இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் போட்டிகளைத் தொடங்கி வைத்தார். இந்தியா சார்பில் 220 பேர் கொண்ட அணி உள்பட மொத்தம் 4500 வீரர்கள், வீராங்கனைகள் 11 நாள்கள் நடைபெறும் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
நேற்று, பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவில் உலக சாம்பியன் மீராபாய் சானு புதிய சாதனையுடன் முதல் தங்கத்தை வென்றார். ஸ்நாட்ச் பிரிவில் 86 கிலோவும், கிளீன் அன்ட் ஜெர்க் பிரிவில் 110 கிலோ எடை (மொத்தம் 196 கிலோ) தூக்கி மீராபாய் சானு புதிய காமன்வெல்த் விளையாட்டு சாதனையை நிகழ்த்தினார்.
இந்நிலையில் இன்று இந்தியாவுக்கு பளு தூக்குதல் பிரிவில் மற்றொரு தங்கம் கிடைத்துள்ளது. 53 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சஞ்சிதா சானு, மொத்தமாக 192 கிலோ எடை தூக்கி தங்கம் வென்றார். ஸ்நாட்ச் பிரிவில் அவர் 84 கிலோ எடையைத் தூக்கி காமன்வெல்த் கேம்ஸ் சாதனையை நிகழ்த்தினார்.
இந்திய அணி இதுவரை 2 தங்கம், 1 வெள்ளி என 3 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 3-ம் இடம் வகிக்கிறது.