உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: நான்கு இந்தியர்கள் பங்கேற்பு!
2018 உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்கு நான்கு இந்தியர்கள் தகுதி பெற்றுள்ளார்கள்...
2018 உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்கு நான்கு இந்தியர்கள் தகுதி பெற்றுள்ளார்கள்.
தரவரிசையின் அடிப்படையில் பி.வி. சிந்து, சாய்னா நெவால், ஸ்ரீகாந்த், பிரனாய் ஆகிய நான்கு இந்திய வீரர்களும் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்கள். சீனாவில் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 5 வரை இந்தப் போட்டி நடைபெறவுள்ளது.
கடந்த வருடம் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சிந்து 19-21, 22-20, 20-22 என்ற செட் கணக்கில் ஜப்பானின் நஜோமி ஒகுஹராவிடம் தோல்வி கண்டார். ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவரான சிந்து, நஜோமியை எளிதாக வீழ்த்தி தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 3-ஆவது செட்டில் கடுமையாகப் போராடிய சிந்து, நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டார். இதில் அவர் தங்கம் வென்றிருந்தால், உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றிருப்பார். அரையிறுதியில் தோற்றதால் சாய்னா நெவால் வெண்கலப் பதக்கம் பெற்றார். உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியா முதல்முறையாக 2 பதக்கங்களைப் பெற்றது.