இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 287 ரன்கள்! கடைசி விக்கெட்டை வீழ்த்தினார் ஷமி!
தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்...
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 88 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்திருந்தார். சாம் கரன் 24 ரன்களுடனும், ஜேம்ஸ் ஆன்டர்சன் ரன்கள் இன்றியும் களத்தில் இருந்தார்கள். இந்திய அணித் தரப்பில் அபாரமாகப் பந்துவீசி அஸ்வின் 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.
இந்நிலையில் இன்று ஆட்டம் தொடங்கியவுடன் 10 பந்துகளில் இங்கிலாந்து அணி மீதமுள்ள கடைசி விக்கெட்டை இழந்தது. கரன் 24 ரன்களுடன் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 89.4 ஓவர்களில் 287 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சிறப்பாகப் பந்துவீசிய ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இன்று, மீதமுள்ள ஒரு விக்கெட்டை எடுத்திருந்தால் அஸ்வின் 5 விக்கெட்டுகள் எடுத்திருப்பார். எனினும் அவருடைய 4 விக்கெட்டுகளால் தான் இங்கிலாந்து அணியால் முதல் இன்னிங்ஸில் 300 ரன்கள் எடுக்கமுடியாமல் போனது.