ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2018 நடத்தும் உரிமையை ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு வழங்கியது பிசிசிஐ.
இப்போட்டியை நடத்தும் உரிமை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கிடைந்தது. ஆனால் பல்வேறு பிரச்னைகள் உள்ள நிலையில் பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாட முடியாத நிலை உள்ளது.
இதனால் போட்டியை ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் உள்ள துபை, அபுதாபில் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
பிசிசிஐ மற்றும் யுஏஇ வாரியங்கள் இடையே இதுதொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது. பிசிசிஐ சார்பில் அதன் தற்காலிக செயலாளர் அமிதாப் செளத்ரி, சிஇஓ ராகுல் ஜோரியும், யுஏஇ வாரியம் சார்பில் அதன் தலைவர் ஷேக் நயன் பின் முபாரக்கும் கையெழுத்திட்டனர்.
ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன. ஆசிய கவுன்சில் போட்டியில் வெல்லும் அணி 6-ஆவது அணியாக இவர்களோடு இணையும்.
செப்டம்பர் 15 முதல் 28 வரை போட்டிகள் நடைபெறும். இப்போட்டிக்கு அதிக வருவாய் தரும் வகையில் இந்தியா-பாகிஸ்தான் மோதும் 2 ஆட்டங்கள் அமைந்துள்ளன.
போட்டியின் மூலம் கிடைக்கும் டிக்கெட் விற்பனை வருவாய், எவ்வாறு பகிரப்படும் எனத் தெரிவிக்கப்படவில்லை. டிவி ஒளிபரப்பு உரிமை வருவாய் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு செல்லும்.