இந்த வருட ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார் பிரபல வீரர் ஹர்பஜன் சிங். இதுவரை மும்பை அணிக்காக விளையாடியவர், முதல்முறையாக சென்னை அணிக்குத் தேர்வாகியுள்ளார்.
சிஎஸ்கே இணையத்தளத்துக்கு அளித்த பேட்டியில் ஹர்பஜன் சிங் கூறியதாவது:
மும்பை அணிக்காக 10 வருடங்கள் விளையாடியுள்ளேன். இப்போது இன்னொரு அற்புதமான அணியுடன் இணைந்துள்ளேன். தோனியுடன் இணைந்து மீண்டும் விளையாடுவது மகிழ்ச்சியளிக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வெல்லவேண்டும் என்கிற குறிக்கோளுடன் இந்தமுறை அவருடன் இணைந்து விளையாடவுள்ளேன்.
ஆட்டத்தின் போக்கை அவர் சரியாகக் கணிப்பார். டி20-யில் இந்த குணாதிசயம் அவசியம் தேவை. ஆட்டத்தின் பற்றிய புரிதலினால்தான் தோனி மிகச் சிறந்த கேப்டனாக உள்ளார்.
சென்னை - மும்பை மோதும் ஆட்டம் எப்போது அழுத்தம் தரக்கூடியது. சூழல் எந்தளவுக்கு மோசமாக இருந்தாலும் இரு அணிகளும் கடைசி வரைக்கும் போராடும். சாம்பியன் அணிகள் அப்படித்தான் விளையாடும் என்று கூறியுள்ளார்.