முகப்பு
செய்திகள்

புரோ கபடி லீக் ஏலம்: 30-இல் மும்பையில் நடக்கிறது; பட்டியலில் 422 வீரர்கள்

புரோ கபடி லீக் (பிகேஎல்) அணிகள் சார்பில் வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் வரும் 30, 31 தேதிகளில் மும்பையில் நடைபெறவுள்ளது.

Updated On : 15 மே, 2018 at 1:11 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

புரோ கபடி லீக் (பிகேஎல்) அணிகள் சார்பில் வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் வரும் 30, 31 தேதிகளில் மும்பையில் நடைபெறவுள்ளது.
கிரிக்கெட், கால்பந்து, பாட்மிண்டன் விளையாட்டுகளைப் போல் நாட்டின் பாரம்பரிய விளையாட்டான கபடியிலும் லீக் போட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டு வெற்றிகரமாக நடந்து வருகிறது. மொத்தம் 12 அணிகள் இதில் இடம் பெற்றுள்ளன. தங்கள் அணிகளை வலிமையாக்கும் வகையில் ஒவ்வொரு அணியும் சிறந்த வீரர்களை ஏலத்தின் மூலம் அதிக விலை தந்து வாங்குகின்றன.
நிகழாண்டு 6-வது புரோ கபடி லீக் போட்டிகள் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி தொடங்குகின்றன. இதற்கான ஏலம் மும்பையில் 30, 31 தேதிகளில் நடக்கிறது. ஏலப்பட்டியலில் மொத்தம் 422 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். 
இவர்களில் ஈரான், வங்கதேசம், கொரியா, ஜப்பான், இலங்கை நாடுகளைச் சேர்ந்த 58 வெளிநாட்டு வீரர்களும் அடங்குவர். மேலும் பிகேஎல் எதிர்கால கபடி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்ட 87 வீரர்களும் அடங்குவர். 
கடந்த ஆண்டு நடந்த ஏலத்தின் போதும் 55 புதிய இளம் வீரர்கள் வாங்கப்பட்டனர். 
ஏற்கெனவே 12 அணிகள் தலை சிறந்த 21 வீரர்களை தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளன. யு மும்பா, யுபி யோத்தா, ஜெய்ப்பூர் பிங்க, போன்றவை இந்த வாய்ப்பை செயல்படுத்தவில்லை.
நடப்புச் சாம்பியன் பாட்னா பைரேட்ஸ், புனேரி பல்தான், குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ், தமிழ் தலைவாஸ், போன்றவை ஏற்கெனவே உள்ள வீரர்களை தக்க வைத்துள்ளன. பெங்களூரு புல்ஸ், தபாங் தில்லி, பெங்கால் வாரியர்ஸ், தெலுகு டைட்டன்ஸ், அணிகளும் சில வீரர்கள் தங்கள் வசமே வைத்துள்ளன. 
மொத்தம் ரூ.4 கோடியை ஊதியத் தொகுப்பாக கொண்டுள்ள ஒவ்வொரு நிர்வாகமும் 18 முதல் 25 வீரர்களை கொண்ட அணியை தேர்வு செய்ய வேண்டும். இதில் 2 முதல் 4 வீரர்கள் வெளிநாட்டினராகவும், 3 வீரர்கள் வரை இளம் வீரர்கள் தேர்வு திட்டத்தில் இருந்தும் பெற வேண்டும்.
நிகழாண்டு ஏலத்தில் இறுதி விலை வாய்ப்பு அறிமுகம் செய்யப்படுகிறது. ஒரு நிர்வாகம் முன்வைக்கும் இறுதி ஏலத் தொகையைப் போல் மற்ற அணிகளும் முன்வைக்கலாம். ஏற்கெனவே 4 வீரர்களை தக்க வைத்துள்ள அணிகளுக்கு 1 வாய்ப்பும், ஏனைய அணிகளுக்கு 2 வாய்ப்புகளும் வழங்கப்படும். 422 வீரர்கள் ஏலப்பட்டியலில் உள்ளதால் நிகழாண்டு புரோ கபடி லீக் ஏலம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.