கடைசி வரை 5 விக்கெட் எடுக்காத துரதிர்ஷ்டம்: முனாஃப் படேல் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார்!
2011 உலகக் கோப்பையில் இந்திய அணியில் இடம்பெற்ற முனாஃப் படேல் தற்போது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்...
2011 உலகக் கோப்பையில் இந்திய அணியில் இடம்பெற்ற முனாஃப் படேல் தற்போது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நான் விளையாடிய வீரர்களில் தோனியைத் தவிர அனைவரும் ஓய்வு பெற்றுவிட்டார்கள். மற்றவர்கள் விளையாடி நான் மட்டும் ஓய்வு பெற்றால் மட்டுமே வருத்தமாக இருக்கும். எனவே தற்போது வருத்தங்கள் எதுவும் இல்லை. நான் கிரிக்கெட்டிலிருந்து விடைபெறுகிறேன் என்பதையும் என்னால் நம்பமுடியவில்லை. எனக்கு கிரிக்கெட் தவிர எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார் 35 வயது முனாஃப் படேல்.
13 டெஸ்டுகள், 70 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் இந்தியாவுக்காக விளையாடியுள்ளார் முனாஃப் படேல். 2006-ல் மொஹலியில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இடம்பிடித்தார். 2011-ல், கார்டிஃபில் இங்கிலாந்துக்கு எதிராக கடைசி ஒருநாள் ஆட்டத்தில் விளையாடினார். எனினும் இந்தியாவுக்கு விளையாடிய ஆட்டங்களில் ஒருமுறை கூட ஐந்து விக்கெட்டுகளை முனாஃப் படேல் எடுத்ததில்லை. டெஸ்டில் 4/25 ஒருநாள் கிரிக்கெட்டில் 4/29, டி20யில் 2/25 என்பதே அவருடைய சிறந்த பந்துவீச்சாகும். டெஸ்டில் 35 விக்கெட்டுகளும் ஒருநாள் கிரிக்கெட்டில் 86 விக்கெட்டுகளும் டி20யில் 4 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.
Advertisement
முதல் டெஸ்டிலேயே 7 விக்கெட்டுகள் (3/72, 4/25) எடுத்து மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தினார். எனினும் காயம் மற்றும் இதர பந்துவீச்சாளர்களின் ஆட்டத்திறனால் முனவால் தொடர்ந்து இந்திய அணியில் நீடிக்கமுடியாமல் போனது. 2011 உலகக் கோப்பைப் போட்டியில் ஜாகீர் கான், யுவ்ராஜுக்கு அடுத்ததாக அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்பதால் இவரை மிகவும் மெச்சினார் பந்துவீச்சுப் பயிற்சியாளர் எரிக் சிமன்ஸ்.