பொறாமை காரணமாக அணியிலிருந்து நீக்கினார்: ஸ்டீவ் வாஹ் மீது ஷேன் வார்னே குற்றச்சாட்டு
கேப்டன் ஆனபிறகு அப்படியே மாறிவிட்டார். அவர் என்னைத் தேர்வு செய்யாததால் இதைக் கூறவில்லை...
புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே, தனது வாழ்க்கை வரலாறுக் குறித்த புதிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அதன் சில பகுதிகள் தி டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ளன. அதில் 1999-ம் ஆண்டு ஆஸ்திரேலியா-மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் 4-வது டெஸ்டில் கேப்டன் ஸ்டீவ் வாஹ் தன்னை நீக்கியது குறித்து எழுதியுள்ளார். ஷேன் வார்னே எழுதியதாவது:
நான் விளையாடிய வீரர்களில் ஸ்டீவ் வாஹ் தான் மிகவும் சுயநலமான வீரர். அவர் தன்னுடைய பேட்டிங் சராசரி 50-ல் இருக்க வேண்டும் என்பதில்தான் குறியாக இருப்பார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில், முக்கியமான கட்டத்தில் அவர் எனக்கு ஆதரவாக இல்லை. தேர்வுக்குழு உறுப்பினரான ஆலன் பார்ட் எனக்கு ஆதரவாக இருந்தார். வார்னே மீது நம்பிக்கை கொள்ளவேண்டும் என்றார். எனக்கு ஸ்டீவ் வாஹ் நண்பராக இருந்தபோதும் முக்கியமான தருணங்களில் நான் அவருக்கு உதவியபோதும் எனக்கு ஆதரவான நிலைப்பாட்டை அவர் எடுக்கவில்லை. நானும் அப்போது மோசமாக நடந்துகொண்டேன்.
மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கைச் சுற்றுப்பயணங்களுக்குப் பிறகு அவருடன் பழகுவது அவ்வளவு எளிதானதாக இல்லை. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாகவே இருந்தோம். ஆனால் அவர் கேப்டன் ஆனபிறகு அப்படியே மாறிவிட்டார். அவர் என்னைத் தேர்வு செய்யாததால் இதைக் கூறவில்லை. நான் சரியாக விளையாடாவிட்டால் என்னைத் தேர்வு செய்ய வேண்டாம். ஆனால் அதற்குக் காரணம் - பொறாமை. இதன் காரணமாக அவர் என்னைத் தேர்வு செய்யவில்லை. நான் என்ன சாப்பிட வேண்டும், எப்படி நடந்துகொள்ளவேண்டும் என எனக்கு ஆலோசனை சொல்ல ஆரம்பித்தார். நான் சொன்னேன், நண்பரே, நீங்கள் உங்களைப் பற்றிக் கவலைப்படுங்கள் என்றேன். இவ்வாறு தனது நூலில் ஸ்டீவ் வாஹ் குறித்து எழுதியுள்ளார் வார்னே.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.