பாகிஸ்தானுக்கு எதிராக ரோஹித் சர்மா-ஷிகர் தவன் இணை அபார ஆட்டம் பல்வேறு புதிய சாதனைகளுக்கு வழிவகுத்துள்ளது.
ஆஸி. அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகம் ஆன தவன், ரோஹித்துடன் இணைந்து சிறப்பாக ஆடினார். அதுமுதல் இருவரும் தொடக்க வீரர்களாக பரிணமித்து வருகின்றனர். ஒரு நாள் ஆட்டத்தில் தற்போதுள்ள சிறந்த தொடக்க இணையாக இவர்கள் உள்ளனர்.
பாக். அணியுடன் நடைபெற்ற ஆட்டத்தில் முதல் விக்கெட்டுக்கு 210 ரன்களை சேர்த்தனர். இது அவர்களின் முதல் இரட்டை சதமாகும்.
மேலும் இருவரும் இணைந்து 100 ரன்களுக்கு மேல் சேர்ப்பது இது 13ஆவது முறையாகும். நிகழாண்டில் இருவரும் இணைந்து 500 ரன்களுக்கு மேல் முதல் விக்கெட்டுக்கு குவித்துள்ளனர்.
துபையில் அதிகபட்சமாக 111 ரன்களை அடித்த வீரர் என்ற சாதனையை ரோஹித் நிகழ்த்தியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிராக அதிகபட்ச ரன் அடித்த கேப்டன் பட்டியலில் தோனிக்கு (113) அடுத்து இரண்டாவது இடத்தில் ரோஹித் உள்ளார். ஒரு நாள் ஆட்டங்களில் 7000 ரன்கள் அடித்தவர் பட்டியலில் இணைந்தார் ரோஹித். மேலும் இந்த சிறப்பை பெறும் 5-ஆவது இந்திய வீரராகவும் உள்ளார். ரோஹித்-தவன் இணை 5000 ரன்களுக்கு மேல் குவித்தவர்கள் பட்டியலில் நான்காவதாக இணைந்துள்ளது..
இதுதொடர்பாக ரோஹித் கூறுகையில்-
நான் கடினமான பயிற்சி மேற்கொண்டு சிறப்பாக ஆடி வருகிறேன். சில குறிப்பிட்ட ஷாட்களை அடிக்க சிரமத்துடன் பயிற்சி மேற்கொண்டேன். பெளலர்கள் மீது நிர்ப்பந்தம் ஏற்படுத்த வேண்டியது பேட்ஸ்மேன்கள் கடமையாகும். பாக். அணி சிறந்த பந்துவீச்சை கொண்டுள்ளது. புதிய பந்தை எதிர்கொள்ளத் தீர்மானித்து ஆட வேண்டும் என்றார்.