வரும் 12-ஆம் தேதி சென்னையில் எம்சிசி-அடிடாஸ் 18 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய டென்னிஸ் சாம்பியன் போட்டி தொடங்குகிறது என தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவர் விஜய் அமிர்தராஜ் தெரிவித்துள்ளார்.
அவர் சனிக்கிழமை கூறியதாவது: நாட்டின் தலைசிறந்த ஜூனியர் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ள இப்போட்டி 12 முதல் 17-ஆம் தேதி வரை நடக்கிறது. அஜய் மாலிக் (ஹரியாணா), கபீர் ஹன்ஸ் (ஒடிஸா), கிருஷண் ஹூடா (சண்டீகர்), தமிழகத்தின் சந்தீப், பூபதி, ராஜேஷ் கண்ணன், ரிஷி பங்கேற்கின்றனர். மகளிர் பிரிவில் சல்ஸா (மகாராஷ்டிரா), பிரேமா, சரண்ô விஜய் , தில்லி காஷிஷ், தமிழகத்தின் லாவண்யா , காவ்யா, குந்தனா, சரண்யா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
எதிர்கால இந்திய நட்சத்திரங்களை தயார்படுத்தும் வகையில் நடத்தப்படும் இப்போட்டியில் வெற்றி பெறுபவருக்கு ரூ.1 லட்சம் பரிசளிக்கப்படும். 120 வீரர், 88 மகளிர் ஒற்றையர் பிரிவிலும், தலா 16 சிறுவர், சிறுமியர் இரட்டையர் பிரிவிலும் ஆடவுள்ளனர். தகுதி ஆட்டம் 10-ஆம் தேதி முதல் தொடங்குகிறது என்றார் அமிர்தராஜ்.