இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி உட்பட அனைத்து பயிற்சியாளர்களின் பதவிக்காலமும் 2019 உலகக் கோப்பையுடன் முடிவுற்றது. எனினும் மே.இ.தீவுகள் தொடர் வரை பயிற்சியாளர்களுக்கு 45 நாள்கள் நீட்டிப்பு தரப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து புதிய தலைமை பயிற்சியாளர், இதர பயிற்சியாளர்களை நியமிக்க பிசிசிஐ சிஓஏ அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 30-ஆம் தேதி இறுதி நாளாக தெரிவிக்கப்பட்டிருந்தது. புதிய பயிற்சியாளர்களை தேர்வு செய்ய கபில்தேவ், அன்ஷுமன் கெய்க்வாட், சாந்தா ஆகியோர் கொண்ட சிஏசிக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.
ரவி சாஸ்திரி நேர்காணலில் நேரடியாக கலந்து கொள்ள வாய்ப்பு தரப்பட்டுள்ளது. லால்சந்த் ராஜ்புத், ராபின் சிங், வெளிநாட்டைச் சேர்ந்த டாம் மூடி (ஆஸி), மைக் ஹெஸ்ஸன் (நியூஸி), பில் சிம்மன்ஸ் (மே.இ,தீவுகள்) ஆகியோர் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில், தலைமை பயிற்சியாளருக்கான நேர்காணல் மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (ஆக. 16) நடைபெறுகிறது. இதில் லால்சந்த் ராஜ்புத், ராபின் சிங், மைக் ஹெஸ்ஸன் ஆகியோர் நேரடியாக கலந்துகொண்டுள்ளனர். ரவி சாஸ்திரி, டாம் மூடி மற்றும் பில் சிம்மன்ஸ் ஆகியோருக்கு ஸ்கைப் மூலம் நேர்காணலை நடத்துகிறது சிஏசி.
இதையடுத்து வெள்ளிக்கிழமை மாலை 7 மணியளவில் இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளரை கபில் தேவ், அன்ஷுமான் கெய்க்வாட், சாந்தா ஆகியோர் கொண்ட சிஏசி அறிவிக்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
இதர துணை பயிற்சியாளர் பணியிடங்களை சீனியர் தேர்வுக் குழுத்தலைவர் பிரசாத் தலைமையிலான குழு தேர்வு செய்கிறது.