டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே சமீபகாலமாக இடம்பெற்று வரும் அஸ்வினுக்கு இன்னொரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆண்டிகுவா-வில் நடைபெற்று வரும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் அஸ்வினுக்குப் பதிலாக ஜடேஜா இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் கோலி, சாஸ்திரிக்கு எதிராக ட்விட்டரில் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்கள்.
கிரிக்கெட்டில் ஒளிபரப்பில் வர்ணனையாளராகப் பணியாற்றிய கவாஸ்கரும் தன் எதிர்ப்பைப் பதிவு செய்தார். அவர் கூறியதாவது:
அஸ்வினுக்குப் பதிலாக ஜடேஜாவைத் தேர்வு செய்தது ஆச்சர்யப்பட வைக்கிறது. மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் எடுத்து சாதித்த வீரருக்கு அணியில் இடமில்லை என்பது திகைப்படைய வைக்கிறது என்று கூறியுள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 11 டெஸ்டுகளில் 552 ரன்களும் 60 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார் அஸ்வின். அதில் நான்கு சதங்களும் 5 விக்கெட்டுகளை 4 தடவையும் எடுத்துள்ளார்.