நியூஸிலாந்து-இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் ஆட்டம் நேப்பியர் மெக்லீன் பூங்கா மைதானத்தில் புதன்கிழமை நடைபெறுகிறது, ஆஸி. மண்ணில் பெற்ற வெற்றியை இங்கும் பெறுமா இந்தியா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் டெஸ்ட், மற்றும் ஒரு நாள் தொடர்களை தலா 2-1 என முதன்முறையாக கைப்பற்றி வரலாறு படைத்தது இந்தியா.
உலகக் கோப்பை போட்டி 2019-இக்கு தயாராகும் வகையில் இங்கிலாந்து மைதானங்களின் தன்மை, சூழல் உடைய நியூஸிலாந்தில் 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர்களில் இந்திய அணி ஆடுகிறது. முதல் ஒரு நாள் ஆட்டம் நேப்பியரில் தொடங்குகிறது.
தொடரும் மிடில் ஆர்டர் சிக்கல்:
இந்திய ஒரு நாள் அணியில் தொடக்க வரிசை ஷிகர் தவன், ரோஹித் சர்மா, விரோட் கோலியுடன் வலுவாக உள்ளது,
எனினும் ஷிகர் தவன் ஆட்டத்திறன் கேள்விக்குறியாக உள்ளது. 9 ஆட்டங்களில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 35 மட்டுமே ஆகும்.
இளம் வீரர் ஷுப்மன் கில் பதிலி தொடக்க வீரராக உள்ளார்.
4, 5, மற்றும் 6-ஆம் நிலை பேட்ஸ்மேன்கள் ஆடும் மிடில் ஆர்டர் நிலையில்லாமல் உள்ளது. இதில் மூத்த வீரர் தோனி மட்டுமே தற்போது பார்மில் உள்ளார்.
அம்பதி ராயுடுவையும் அணி நிர்வாகம் நம்பியுள்ளது. மேலும் கேதர் ஜாதவ் அல்லது தினேஷ் கார்த்திக்கும் மிடில் ஆர்டர் வரிசையில் இடம் பெற வாய்ப்புள்ளது.
சிறிய மைதானங்கள்:
அபார வேகப்பந்துவீச்சு
நியூஸிலாந்தில் உள்ள கிரிக்கெட் மைதானங்கள் பொதுவாக சிறியவையாக உள்ளன. மேலும் நியூஸி. அணியில் டிரென்ட் பெளல்ட், டிம் செளதி, லாக்கி பெர்குஸன் உள்ளிட்ட அபாயகரமான சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இந்திய அணியைப் போல் சொந்த மண்ணில் நியூஸி. அணியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
நேப்பியரில் நடைபெறும் முதல் ஆட்டம் கடும் வெப்பமயமான சூழலில் நடக்கிறது.
சிறந்த பந்துவீச்சைப் போல், நியூஸிலாந்து அணியில் பேட்டிங் வரிசையும் வலுவாக உள்ளது. குறிப்பாக தொடக்க வீரர்கள் மார்ட்டின் கப்டில், டாம் லத்தம், ராஸ் டெய்லர், கேப்டன் கேன் வில்லியம்ஸன், காலின் மன்றோ ஆகியோர் அதிரடி வீரர்களாக திகழ்கின்றனர்.
இந்திய பந்துவீச்சும் வலுவாகவே உள்ளது. பிரதான பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. புவனேஸ்வர் குமார், முகமது ஷமி ஆகியோருக்கு துணையாக மூன்றாம் வேகப்பந்து வீச்சாளராக கலீல் அகமது, முகமது சிராஜ் ஆகிய ஒருவர் இடம் பெறுவார்.
குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, சஹல் ஆகியோர் சுழற்பந்து வீச்சில் தங்கள் பங்கை ஆற்றுவர்.
அதே நேரத்தில் இளம் வீரர் ரிஷப் பந்த் இங்கிலாந்து லயன்ஸ்-இந்திய ஏ அணிகளுக்கு இடையிலான தொடரில் பங்கேற்கிறார்.
கேன் வில்லியம்ஸன், ராஸ் டெய்லரை அவுட் செய்வதில் கவனம்: கோலி
நியூஸிலாந்து அணி உலகின் மூன்றாவது சிறந்த அணியாக உள்ளது. அவர்களது பலம், பலவீனங்களை அறிந்துள்ளோம். எனினும் சொந்த மண்ணில் அவர்களை எதிர்கொள்வது கடினமாகும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். வெற்றி பெறக்கூடிய சக்தி அந்த அணிக்கு உள்ளது. மேலும் சரியான வகையில் கிரிக்கெட்டை அவர்கள் ஆடி வருகின்றனர். கேன் வில்லியம்ஸன், ராஸ் டெய்லர் ஆகியோர் விரைவாக அவுட் செய்வதில் கவனம் செலுத்துவோம். ஏனைய வீரர்கள் மீதும் சிறப்பு கவனம் செலுத்துவோம்.
கோலியை கட்டுப்படுத்த முயற்சிப்போம் : நியூஸி கேப்டன் கேன் வில்லியம்ஸன்:
இலங்கையுடன் நடைபெற்ற ஒரு நாள் தொடரில் நாங்கள் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுள்ளோம். அத்தொடரை முழுமையாக கைப்பற்றினாலும்,, இந்தியாவுடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம், கேப்டன் கோலியை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதில் தனி கவனம் செலுத்துவோம். உலகின் சிறந்த வீரர்களில் ஒருவராக உள்ளார் கோலி. மெக்லீன் மைதானம் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும். பெளலர்களுக்கும் அதிக வேலை காத்துள்ளது என்றார்.