இந்தோனேஷியா மாஸ்டர்ஸ்: இரண்டாவது சுற்றில் சிந்து, சாய்னா, ஸ்ரீகாந்த்
இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நெவால் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நெவால் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
சீன வீராங்கனை லீயை எதிர்கொண்ட சிந்து, 22-24, 21-8, 21-17 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றார். அடுத்த சுற்றில் இந்தோனேஷிய வீராங்கனை கிரிகோரியாவை வியாழக்கிழமை எதிர்கொள்கிறார்.
இந்திய வீராங்கனை சாய்னா நெவால் 7-21, 21-16, 21-11 என்ற செட் கணக்கில் உள்ளூர் வீராங்கனை தினார் டயா அயூஸ்டீனை வீழ்த்தினார்.
முதல் செட்டை பறிகொடுத்த சாய்னா, பின்னர் சுதாரித்துக் கொண்டு அனல் பறக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டாவது செட்டை 21-16 என்ற கணக்கில் கைப்பற்றினார். இரண்டாவது செட் ஆட்டம் கடும் சவால் அளிக்கும் வகையில் இருந்தது.
மூன்றாவது செட் ஆட்டத்தையும் சாமர்த்தியமான தனது சர்வீஸ்களால் 21-11 என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றி பெற்றார்.
இதுவரை தினார் டயாவுடன் 3 ஆட்டங்களில் மோதியுள்ள சாய்னா, அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளார். அடுத்த சுற்று ஆட்டத்தில் மற்றொரு இந்தோனேஷிய வீராங்கனை ஃபிட்ரியானியை சந்திக்கிறார் சாய்னா.
ஸ்ரீகாந்த் வெற்றி: ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், மலேசியாவின் சாங்கை 21-12, 21-8 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார்.
ஆடவர் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில், இந்தியாவின் மனு அட்டாரி ஜோடி, 14-21, 21-19, 21-15 என்ற செட் கணக்கில் டென்மார்க் இணையை வீழ்த்தியது. மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா ஜோடி முதல் சுற்றில் தோல்வியைத் தழுவி வெளியேறியது.