கிரிக்கெட்டில் புதுவரவு!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தனது ஆட்டத்தால் கிரிக்கெட் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த இருபத்து இரண்டு வயதான மாதவ் திவாரி, ஐ.பி.எல். 2026 ஏலத்தில், தில்லி கேப்பிடல்ஸ் அணியால் ரூ.40 லட்சத்துக்கு வாங்கப்பட்டவர்.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தனது ஆட்டத்தால் கிரிக்கெட் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த இருபத்து இரண்டு வயதான மாதவ் திவாரி, ஐ.பி.எல். 2026 ஏலத்தில், தில்லி கேப்பிடல்ஸ் அணியால் ரூ.40 லட்சத்துக்கு வாங்கப்பட்டவர். மாதவின் ஆல்-ரவுண்டர் ஆட்டம், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக, தில்லி அணிக்கு மதிப்புமிக்க மூன்று விக்கெட் வெற்றியைப் பெற்றுத் தந்தது. இவர் தனது இரண்டாவது ஐ.பி.எல். போட்டியில் கிரிக்கெட் ரசிகர்களை தனது ஆட்டத்தால் உற்றுக் கவனிக்கச் செய்தார்.
தில்லி கேப்பிட்டல்ஸ் அணியை போட்டியிலிருந்து வெளியேற்றும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்த அபாயகரமான பிரியான்ஷ் ஆர்யாவின் விக்கெட்டை மாதவ் வீழ்த்தினார்.
பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து பந்துவீசிய மாதவ், முதலில் பிரியான்ஷ் ஆர்யா, பிறகு கூப்பர் கொன்னோலி ஆகியோரின் இரண்டு முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, 8 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து, தனது அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தார். இவர் ஆட்ட நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Advertisement
Advertisement
மத்திய பிரதேசத்துக்கு உள்பட்ட இந்தோரைச் சேர்ந்த மாதவ் திவாரி தனது சாதனைகள் குறித்து கூறியது:
''லாரி போக்குவரத்துத் தொழிலை எனது குடும்பத்தினர் நடத்திவருகின்றனர். கூட்டுக் குடும்பம். படிப்பில் நான் சிறந்து விளங்கினாலும், கிரிக்கெட் எனது உயிராக இருந்தது.
கிரிக்கெட் வீரர் அமய் குராசியா நடத்தும் 'அமய் குராசியா கிரிக்கெட் அகாதெமி'யில் என்னை அப்பா சேர்த்துவிட்டார். அந்த அகாதெமி எனது வீட்டிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்திருந்தது. அதிகாலை 5 மணிக்கே பயிற்சிக்குத் தயாராகிவிட வேண்டும்.
எனக்கு பேட்டிங்தான் பிடிக்கும். அதனால் பந்து வீசுவதைத் தவிர்த்தேன். ஆனால், குராசியா பந்து வீச்சையும் வலுக்கட்டாயமாகச் சொல்லிக் கொடுத்தார். கரோனா ஊரடங்கின்போது பயிற்சி செய்வதற்காக பந்துவீச்சு இயந்திரத்தை வாங்கி, வீட்டில் பயிற்சி பெற்றேன். பந்துகளால் அடிபட்டு வீட்டில் பல பொருள்கள் உடைந்தன.
அகமதாபாத்தில் நடைபெற்ற ஒரு போட்டியில் பங்கேற்பதற்காக, நான் என் சகோதரியின் திருமணத்தையே தவறவிடும் அளவுக்கு கிரிக்கெட்டை தீவிரமாக நேசித்தேன். கிரிக்கெட் விளையாட்டில் எனது அர்ப்பணிப்பு அடர்த்தியாக இருந்தது.
மத்திய பிரதேச கிரிக்கெட் அணியில் இடம்பெற முடியாவிட்டால், எப்படியாவது எம்.பி.ஏ. படித்து முடித்துவிடுகிறேன் என்று அப்பாவுக்கு உறுதி கொடுத்திருந்தேன். 13-ஆம் வயதில் இருபது வயது இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடுவேன். அவர்கள் வீசும் பந்துகளை சிக்ஸர்களாக விளாசுவேன். மத்திய பிரதேச அணிக்காக விளையாடும் வாய்ப்பு கடைசிவரை கிடைக்கவில்லை. ஆனால், தில்லி அணியில் இடம் கிடைத்தது.
தர்மசாலாவில் அண்மையில் நடைபெற்ற போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ் அணியின் வெற்றியில் 'ஆட்ட நாயகன்' விருதைப் பெற முடிந்தது'' என்கிறார் மாதவ்.
பயிற்சியாளர் அமய் குராசியா கூறுகையில், ''மாதவுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது. மணிக்கு 137- 140 கி.மீ. வேகத்தில் பந்து வீசக்கூடியவர். பந்தை மிகச் சிறப்பாக ஸ்விங் செய்வார். அவரை நாள் முழுவதும் பந்துவீச வைத்தாலும் கொஞ்சமும் அசராமல் வீசுவார். பேட்டிங்கை நாள் முழுக்கச் செய்தாலும் சளைக்காமல் விளாசுவார். ஐபிஎல் விளையாடுவதில் மாதவுக்கு இது இரண்டாவது ஆண்டு. மாதவ் இந்தியாவுக்காக விளையாடுவதை யாராலும் தடுக்க முடியாது'' என்கிறார்.