உ.பி.யில் 11-ஆம் வகுப்பு மாணவன் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை!
குற்றஞ்சாட்டப்பட்ட நபர் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை...
லக்னௌ : உத்தரப் பிரதேசத்தில் 11-ஆம் வகுப்பு மாணவன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி ஒருவர் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது உத்தரப் பிரதேசத்தில் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் காஸியாபாத் அருகே கோதா பகுதியில் கடந்த மே 28-ஆம் தேதி சூர்ய பிரதாப் சௌஹான் என்ற 17 வயது சிறுவனுக்கும் அவரது நண்பர்கள் குழுவுக்கும் இடையே மோட்டார் சைக்கில் ஓட்டுவதில் ஏற்பட்ட தகராறு மோதலில் முடிந்தது. சண்டை முற்றியதில் சௌஹானை அவரது நண்பர்கள் குழு கத்தியால் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மே 29-இல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, கொலை வழக்குப் பதிந்து காவல் துறை நடத்திய விசாரணையில் இந்தக் கொலையில் 5 நபர்களுக்கு தொடர்பிருப்பதை உறுதி செய்தனர். அவர்களில் மூவர் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட ஆஸாத் என்ற நபர் தலைமறைவானார். அவரைப் பற்றிய துப்பு அளித்தால் ரூ. 50,000 வெகுமதி அறிவிக்கப்பட்டு அவர் தேடப்பட்டு வந்தார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், அந்த நபர் மறைந்திருந்த இடம் போலீஸாருக்கு தெரிய வரவே, சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறை அதிகாரிகள் ஆஸாத்தைப் பிடிக்க முயன்றபோது அவர்களை நோக்கி தன்னிடமிருந்த துப்பாக்கியால் ஆஸாத் சுட்டதாக கூறப்படுகிறது. பதிலுக்கு போலீஸாரும் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் ஆஸாத் தப்பியோட முயன்றாராம்.
அப்போது காவல் துறையினர் அவரைச் சுட்டுப் பிடித்தனர். அதில் பலத்த காயமடைந்த ஆஸாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.