2007 உலகக் கோப்பை இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. அதில் வங்கதேசத்திடம் தோல்வியடைந்து முதல் சுற்றுடன் வெளியேறியது. மேலும் இந்த தொடரின் 3 ஆட்டங்களில் சச்சின் டெண்டுல்கர் 64 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இந்நிலையில், இந்த உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு ஓய்வு பெறலாம் என்று முடிவெடுத்ததாக சச்சின் டெண்டுல்கர் கூறினார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
அந்த காலகட்டத்தில் எனது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக கருதினேன். ஏனென்றால் அப்போது இந்திய கிரிக்கெட் அணியின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. அச்சமயம் சில மாற்றங்கள் இந்திய கிரிக்கெட்டுக்கு தேவைப்பட்டது. அவை ஏற்படவில்லை என்றால் ஓய்வு பெறலாம் என்று முடிவெடுத்துவிட்டேன்.
அப்போதுதான், எனக்கு விவியன் ரிச்சர்ட்ஸ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். சுமார் 45 நிமிடங்களுக்கு மேல் இந்த உரையாடல் நீடித்தது. என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை இன்னும் பிரகாசமாக இருப்பதாக ஊக்கப்படுத்தினார். அவருடனான உரையாடல் எனக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு எனது ஆட்டம் மிகச்சிறப்பாக அமைந்தது.
மேலும் எனது சகோதரர் 2011 உலகக் கோப்பை இறுதிப்போட்டி மும்பையில் நடைபெறவுள்ளது. அப்போது நான் கனவு கண்ட உலகக் கோப்பையை கையில் ஏந்த ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று என்னை மேலும் ஊக்கப்படுத்தினார் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.