உலக கோப்பை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் சேர்க்கப்படாத அபித் அலி, இஃப்திகர் அகமது, முகமது ரிஸ்வான், உஸ்மான் ஷின்வாரி மற்றும் முகமது நவாஸ் ஆகியோர் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாட சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளரும், தேர்வுக் குழு தலைவருமான மிஸ்பா-உல்-ஹக் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இலங்கைக்கு எதிராக நடைபெறவுள்ள ஒரு நாள் தொடரில் விளையாட அபித் அலி, இஃப்திகர் அகமது, முகமது ரிஸ்வான், உஸ்மான் ஷின்வாரி ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தனித்தனி அணிகளை உருவாக்க திட்டம் வைத்துள்ளேன். பாகிஸ்தானைப் பொருத்தவரையில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அணியின் விளையாட்டுத் திறன் ஸ்திரமற்ற நிலையிலேயே உள்ளது. எனவே, அணியின் பந்து வீச்சு மற்றும் பீல்டிங் திறனை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.