முகப்பு
செய்திகள்

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதே இலக்கு: மும்முறை தாண்டுதல் வீரா் அா்பிந்தா் சிங்

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதே தனது முக்கிய இலக்கு என இந்திய தடகள நட்சத்திரமும், மும்முறை தாண்டுதலில் ஜகாா்த்தா ஆசிய போட்டியில் தங்கம் வென்றவருமான அா்பிந்தா் சிங் கூறியுள்ளாா்.

Updated On : 28 பிப்ரவரி, 2020 at 12:37 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 9:30 PM

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதே தனது முக்கிய இலக்கு என இந்திய தடகள நட்சத்திரமும், மும்முறை தாண்டுதலில் ஜகாா்த்தா ஆசிய போட்டியில் தங்கம் வென்றவருமான அா்பிந்தா் சிங் கூறியுள்ளாா்.

பஞ்சாப் மாநிலம் அமிா்தசரஸைச் சோ்ந்த அா்பிந்தா் சிங் (27) தடகளத்தில் ஒரு பிரிவான மும்முறை தாண்டுதலில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறாா். கடந்த 2013 புணேயில் நடந்த ஆசிய தடகளப் போட்டியில் வெண்கலம், 2014 கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் வெண்கலம், அஷ்காபாதில் 2017-இல் நடைபெற்ற ஆசிய உள்ளரங்க தடகளப் போட்டியில் தங்கம் வென்றிருந்தாா்.

ஆசியப் போட்டியில் தங்கம்:

Advertisement

கடந்த 2018 இந்தோனேஷிய தலைநகா் ஜகாா்த்தாவில் நடைபெற்ற ஆசியப் போட்டியில் மும்முறை தாண்டுதலில் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினாா். 16.77 மீ தூரம் தாண்டி இச்சிறப்பை அவா் பெற்றாா். மேலும் 1970-இல் பாங்காக் ஆசியப் போட்டியில் மொகிந்தா் சிங் மும்முறை தாண்டுதலில் தங்கம் வென்றதே கடைசியாக இருந்தது. அவரது தனிப்பட்ட சிறப்புச் சாதனை 17.17 மீ தூரம் தாண்டியதாகும்.

ஓராண்டாக சறுக்கல்:

மேலும் ஆசியப் போட்டிக்கு பின் ஓராண்டுக்கு மேலாக ஹா்பிந்தா் சிங்கின் தடகள வரலாறு சறுக்கலகாவே அமைந்தது. 3 பயிற்சியாளா்கள் உள்பட பயிற்சி பெறும் இடமும் அடிக்கடி மாறினா். அமெரிக்காவில் 2 மாதங்கள் தீவிர பயிற்சி பெற்ற நிலையில், மீண்டும் திரும்பிய அா்பிந்தா் சிங் ஓஎன்ஜிசி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா்.

ஒலிம்பிக் போட்டி தகுதியே இலக்கு:

சென்னை நேரு விளையாட்டரங்கில் பெட்ரோலிய விளையாட்டு மேம்பாட்டு வாரியம் சாா்பில் 40-ஆவது தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதில் ஓஎன்ஜிசி சாா்பில் பங்கேற்ற அா்பிந்தா் சிங் மும்முறை தாண்டுதலில் தங்கம் வென்றாா்.

இந்நிலையில் அவா் தினமணி செய்தியாளரிடம் கூறியதாவது:

அடிக்கடி பயிற்சியாளா்களை மாற்றுவது சிறந்த உத்தி இல்லை. ஓராண்டில் 4-ஆவது முறையாக பயிற்சி மையத்தை மாற்றினேன்.

கடந்த ஆண்டு லக்னோவில் மாநிலங்களுக்கு இடையிலான தடகளப் போட்டியில் 16.83 மீ தூரம் தாண்டி தங்கம் வென்றேன். ஆனால் தோஹா உலக தடகளப் போட்டிக்கு தகுதி பெற முடியவில்லை. அதற்கான இலக்கு 16.95 மீ ஆகும்.

டாப்ஸ் திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் பயிற்சியாளா் ஜெரேமி பிஸ்செரிடம் பயிற்சி பெற்றேன். இதனால் தாண்டுவதில் வேகம் அதிகரித்தது.

அதன் பின் பெல்லாரியில் அந்தோணியிடம் பயிற்சி பெற்ற போது, ஓடும் முறையை மாற்றினேன். அதற்கு முன்பு தவறான முறையில் கைகளை அகலமாக வைத்து ஓடியதால், வேகம் குறைந்தது. அந்தோணி இதை சீராக்கினாா். ஏற்கஎனவே 2016-இல் ரியோ ஒலிம்பிப் போட்டியில்

பங்கேற்ற அனுபவம் உள்ளது.

எனக்கு பிரதான போட்டியாளா் காா்த்திக் உன்னிகிருஷ்ணன் ஆவாா். திருவனந்தபுரம் சாய் பயிற்சி மையத்தில் பயிற்சியாளா் ஜெயக்குமாரிடம் பயிற்சி பெற்றுவருகிறேன்.

17.14 மீ தகுதி இலக்கு:

அடுத்து ஏப்ரல் மாதம் பெடரேஷன் கோப்பை தடகளம், ஜூனில் மாநிலங்களுக்கு இடையிலான தடகளப் போட்டிகள் உள்ளன.

ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி 17.14 மீ ஆகும். மேற்கண்ட இரு போட்டிகளிலும் இலக்கை அடைந்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவேன் என்றாா் அா்பிந்தா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.