உஃபா: ரஷியாவில் நடைபெற்ற உலக ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் பிரிவில் இந்தியாவுக்கு ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
ஆடவருக்கான 61 கிலோ பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் ரவீந்தர் 3-9 என்ற கணக்கில் ஈரான் வீரர் ரஹ்மான் மெளசா அமெளசத்காலிலியிடம் வீழ்ந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
ஆடவருக்கான பிளே ஆஃப் சுற்றில் 74 கிலோ பிரிவில் இந்தியாவின் யாஷ் 12-6 என்ற கணக்கில் கிர்ஜிஸ்தானின் ஸ்டாம்புல் ஜானிபெக்கை வென்றார். 92 கிலோ பிரிவில் பிருத்வி பாபாசாஹேப் பாட்டீல் 2-1 என்ற கணக்கில் ரஷியாவின் இவான் கிரிலோவை வீழ்த்தி வெண்கலம் வென்றார். 125 கிலோ பிரிவில் அனிருத் 7-2 என்ற கணக்கில் அஜர்பைஜானின் அய்தின் அஹமதோவை வென்றார். இவர்களுக்கு முன் கெளரவ் பல்யான் (79 கிலோ), தீபக் (97 கிலோ) ஆகியோரும் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தனர்.
மகளிருக்கான 76 கிலோ பிரிவில் இந்தியாவின் பிபாஷா அதிரடியாக 6-3 என்ற கணக்கில் கஜகஸ்தானின் தில்னாஸ் முல்கினோவாவையும், 9-4 என்ற கணக்கில் மங்கோலியாவின் ஆட்பாக் அல்ஸிபாட்டையும் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். 50 கிலோ பிரிவில் இந்தியாவின் சிம்ரன் அரையிறுதியில் அமெரிக்காவின் எமிலி கிங் ஷில்சனிடம் தோல்வி கண்டார். இதர இந்திய போட்டியாளர்களான சிதோ (55 கிலோ), குசும் (59 கிலோ), அர்ஜு (68 கிலோ) ஆகியோர் தங்களது காலிறுதிச்சுற்றுகளில் தோற்று வெளியேறினர்.