சென்னையில் நவம்பர் 20ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார்.
கடந்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2021 தொடரின் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது.
இதையடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பாராட்டிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த வெற்றியை கொண்டாட சென்னை அன்புடன் காத்திருக்கிறது மகேந்திர சிங் தோனி என டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதற்கிடையே சென்னை வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்த அணியின் நிர்வாகம் முடிவெடுத்த நிலையில் உலக கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக சென்னை அணியின் கேப்டன் தோனி, சர்துல் தாகூர், ஜடேஜா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திலேயே இருந்ததால் பாராட்டு விழாவிற்கான தேதி முடிவு செய்யப்படாமல் இருந்தது.
தற்போது உலக கோப்பை தொடர் முடிவடைந்ததையடுத்து வருகின்ற நவ. 20ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் நேரில் பங்கேற்று வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க உள்ளார்.