ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் ஸ்டோக்ஸ், பட்லர் கலந்துகொள்ள முடியாத காரணத்தால் இரு புதிய வீரர்களைத் தேர்வு செய்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
கரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021 போட்டி, செப்டம்பா் 19-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்குகிறது. துபையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்-சென்னை சூப்பா் கிங்ஸ் அணிகள் விளையாடவுள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் ஸ்டோக்ஸ், பட்லர் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 2-வது குழந்தை பிறப்பதால் பட்லரும் ஓய்வு எடுப்பதால் ஸ்டோக்ஸும் ஐபிஎல் 2021 போட்டியில் கலந்துகொள்ளவில்லை. இதனால் மே.இ. வீரர்கள் எவின் லூயிஸ், ஒஷானே தாமஸ் ஆகியோரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தேர்வு செய்துள்ளது. இதற்கு முன்பு மும்பை அணிக்காக இரு வருடங்கள் லூயிஸ் விளையாடியுள்ளார். ராஜஸ்தான் அணியில் ஏற்கெனவே 2019-ல் தாமஸ் விளையாடியுள்ளார்.
ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் ராஜஸ்தான் அணி 5-வது இடத்தில் உள்ளது. செப்டம்பர் 21 தனது முதல் ஆட்டத்தை பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடுகிறது.