என்ன திட்டம் இது?: இந்திய அணி மீது அகர்கர் அதிருப்தி
சுழற்பந்து வீச்சாளர் சஹாலைச் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்று முன்னாள் வீரர் அஜித் அகர்கர் கூறியுள்ளார்.
சுழற்பந்து வீச்சாளர் சஹாலைச் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்று முன்னாள் வீரர் அஜித் அகர்கர் கூறியுள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தை வென்ற இந்திய அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியுள்ளது. போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற 2-வது ஒருநாள் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மே.இ. தீவுகள் அணி, 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்தது. ஷாய் ஹோப் 115 ரன்களும் கேப்டன் பூரன் 74 ரன்களும் எடுத்தார்கள். ஷர்துல் தாக்குர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணி 49.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்து பரபரப்பான முறையில் வெற்றி பெற்றது. கடைசி 10 ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 100 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கைவசம் 5 விக்கெட்டுகளே மீதமிருந்தன. ஆல்ரவுண்டரான அக்ஷர் படேல் அதிரடியாக விளையாடி 35 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்குப் பெரிதும் உதவினார். ஷுப்மன் கில் 43, ஷ்ரேயஸ் ஐயர் 63, சஞ்சு சாம்சன் 54 ரன்கள் எடுத்தார்கள்.
2-வது ஒருநாள் ஆட்டத்தில் 17-வது ஓவரின்போதுதான் பந்துவீச அழைக்கப்பட்டார் சுழற்பந்து வீச்சாளர் சஹால். அவரால் 10 ஓவர்களையும் முழுதாக வீசி முடிக்க முடியவில்லை. 9 ஓவர்கள் வீசி 1 விக்கெட்டுடன் 69 ரன்கள் கொடுத்தார். இதுபற்றி முன்னாள் வீரர் அகர்கர் கூறியதாவது:
Advertisement
Advertisement
சஹாலைத் தாமதமாகக் களமிறக்குவது குறித்த திட்டம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. அவர் எப்போது பந்துவீச வந்தாலும் நன்றாகப் பந்துவீசி வருகிறார். நீங்கள் எவ்வளவு சிறந்த பந்துவீச்சாளராக இருந்தாலும், களத்தில் ஒரு பேட்டர் நீண்ட நேரம் விளையாடி வந்தால், அவர்கள் அதிரடியாக விளையாட ஆரம்பிப்பார்கள். எனவே சஹாலை முன்கூட்டியே பந்துவீசச் செய்து விக்கெட்டுகள் எடுக்க முயல்வேண்டும் என்றார்.