முகப்பு
செய்திகள்

காமன்வெல்த் போட்டி: நீரஜ் சோப்ரா விலகல், காரணம் என்ன?

காமன்வெல்த் போட்டிகளிலிருந்து பிரபல இந்திய வீரர் நீரஜ் சோப்ரா விலகியுள்ளார்.

Updated On : 26 ஜூலை 2022, 1:28 pm IST
பகிர்:

காமன்வெல்த் போட்டிகளிலிருந்து பிரபல இந்திய வீரர் நீரஜ் சோப்ரா விலகியுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகளப் பிரிவில் இந்திய ஈட்டி எறிதல் வீரா் நீரஜ் சோப்ரா (23) தங்கப் பதக்கம் வென்றார். இறுதிச்சுற்றில் அவா் 87.58 மீ. தூரம் எறிந்து முதலிடம் பிடித்தாா். ஃபின்லாந்தில் நடைபெற்ற பாவோ நுர்மி போட்டியில் 89.30 மீ. தூரம் எறிந்து 2-ம் இடம் பிடித்ததோடு புதிய தேசிய சாதனையையும் படைத்தார் நீரஜ் சோப்ரா.  இதையடுத்து அமெரிக்காவில் நடைபெற்ற உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியிலும் நீரஜ் சோப்ரா தங்கம் வெல்வார் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிச்சுற்றில் 88.13 மீ. தூரத்துக்கு ஈட்டியை எறிந்து 2-ம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார் நீரஜ் சோப்ரா. உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற 2-வது இந்தியர் நீரஜ் சோப்ரா. 2003-ல் பாரிஸில் அஞ்சு பாபி ஜார்ஜ் வெண்கலம் வென்றார். 

Advertisement

Advertisement

இந்நிலையில் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகளில் நீரஜ் சோப்ரா பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக பிர்மிங்கமில் தன்னுடைய வெற்றியை நீரஜ் சோப்ரா தக்கவைத்துக்கொள்ள மாட்டார் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. காயம் காரணமாக ஒரு மாதம் ஓய்வெடுக்க வேண்டியிருப்பதால் இந்த முடிவை நீரஜ் சோப்ரா எடுத்துள்ளார். 

2018-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் ஈட்டு எறிதல் பிரிவில் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா. 2022 பிர்மிங்கம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறுகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.