ஐபிஎல் தொடரில் மீண்டும் பயிற்சியாளராக செயல்பட விரும்புவதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் கடந்த 7 ஆண்டுகளாக தில்லி கேபிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் செயல்பட்டு வந்தார். தில்லி கேப்பிடல்ஸ் அணிக்கு கோப்பையை வென்று கொடுக்க முடியாத காரணத்தினால், அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதாக கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் மீண்டும் பயிற்சியாளராக செயல்பட விரும்புவதாகவும், தில்லி கேபிடல்ஸ் அணி இந்தியர் ஒருவரை அந்த அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக்க விரும்புவதாகவும் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக ஐசிசி ரிவ்யூவில் ரிக்கி பாண்டிங் பேசியதாவது: ஐபிஎல் தொடரில் மீண்டும் பயிற்சியாளராக செயல்படுவதை விரும்புகிறேன். ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு ஆண்டும் எனக்கு சிறப்பானதாக அமைந்தது. மும்பை அணியில் ஒரு வீரராக இருந்தது முதல் பயிற்சியாளர் பதவி வரை அனைத்தும் சிறப்பாக இருந்தது. தில்லி கேபிடல்ஸ் அணியுடன் கடந்த 7 ஆண்டுகளாக அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளராக பயணித்துள்ளேன். துரதிருஷ்டவசமாக, நான் நினைத்தது போன்ற முடிவுகள் எனக்கு தில்லி கேபிடல்ஸ் அணியுடன் கிடைக்கவில்லை. அவர்களுக்கு கோப்பையை வென்று தர வேண்டும் என விரும்பினேன். ஆனால், அது நடக்கவில்லை.
தில்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம் இந்திய வீரர் ஒருவரை தலைமைப் பயிற்சியாளராக நியமிக்க விரும்புகின்றது. ஐபிஎல் தொடர் நடைபெறும்போது மட்டுமல்லாது, ஐபிஎல் தொடர் நடைபெறாதபோதும் வீரர்களுடன் நேரத்தினை செலவிடக் கூடிய ஒருவரை அவர்கள் பயிற்சியாளராக தேடுகின்றனர். ஐபிஎல் தொடரைத் தவிர்த்து, எனக்கு மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. என்னால் தில்லி கேபிடல்ஸ் வீரர்களுடன் ஆண்டு முழுவதும் நேரம் செலவிட முடியாது. ஐபிஎல் தொடரில் பயிற்சியாளராக செயல்பட மீண்டும் வாய்ப்பு கிடைக்கும். ஐபிஎல் தொடரில் மீண்டும் பயிற்சியாளராக செயல்பட விரும்புகிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.