டி20 உலகக் கோப்பை தொடரை நடத்தலாமா? ராணுவத்திடம் உறுதி கேட்கும் வங்கதேச கிரிக்கெட் வாரியம்!
டி20 உலகக் கோப்பையை நடத்துவதற்கான பாதுகாப்பு உறுதியை வங்கதேச கிரிக்கெட் வாரியம் அந்நாட்டு ராணுவத்திடம் கேட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பையை நடத்துவதற்கான பாதுகாப்பு உறுதியை வங்கதேச கிரிக்கெட் வாரியம் அந்நாட்டு ராணுவத்திடம் கேட்டுள்ளது.
மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடர் வருகிற அக்டோபரில் வங்கதேசத்தில் நடைபெறவுள்ளது. போட்டிகள் அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 20 வரை நடைபெறவுள்ளன. வங்கதேசத்தில் வன்முறை வெடித்து ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதால், டி20 உலகக் கோப்பைத் தொடர் வங்கதேசத்தில் நடத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பையை நடத்துவதற்கான பாதுகாப்பு உறுதியை வங்கதேச கிரிக்கெட் வாரியம் அந்நாட்டு ராணுவத்திடம் கேட்டுள்ளது.
இது தொடர்பாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தரப்பில் வங்கதேசத்தின் ராணுவ தளபதிக்கு கடிதம் ஒன்றும் எழுதப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வங்கதேச கிரிக்கெட் வட்டாரங்கள் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: நேர்மையாக கூற வேண்டுமென்றால், பல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. வங்கதேசத்தில் டி20 உலகக் கோப்பையை நடத்துவது தொடர்பாக ராணுவத் தலைமைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை டி20 தொடர் தொடங்குவதற்கு இன்னும் இரண்டு மாதங்களே இருப்பதால், தொடரை நடத்துவதற்கான பாதுகாப்பு உறுதி குறித்து ராணுவத்திடம் முறையிட்டுள்ளோம். வங்கதேசத்தில் உலகக் கோப்பை டி20 தொடரை நடத்த முயற்சி செய்து வருகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் வன்முறை நீடிக்கும்பட்சத்தில், மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடர் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் அல்லது இலங்கைக்கு மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.