சச்சின் டெண்டுகல்கரின் சாதனையை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முறியடிக்க வாய்ப்பிருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரராக இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். அவர் டெஸ்ட் போட்டிகளில் 15,921 ரன்கள் குவித்துள்ளார். அதில் 51 சதங்கள் மற்றும் 68 அரைசதங்கள் அடங்கும். அவருக்கு அடுத்தபடியாக ரிக்கி பாண்டிங், ஜாக் காலிஸ், ராகுல் டிராவிட், அலெஸ்டர் குக், சங்ககாரா மற்றும் ஜோ ரூட் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
இந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக நன்றாக விளையாடி ரன்கள் குவித்தால் அடுத்த 4 ஆண்டுகளில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஜோ ரூட் முறியடிக்க வாய்ப்பிருப்பதாக ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக ரிக்கி பாண்டிங் பேசியதாவது: கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜோ ரூட் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் தொடர்ச்சியாக ரன்கள் குவிக்கும்பட்சத்தில், டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைக்க வாய்ப்புள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்பு ஜோ ரூட், டெஸ்ட் போட்டிகளில் அதிக அரைசதங்கள் அடித்திருக்கிறார். அப்போது அவரால் அரைசதங்களை சதங்களாக மாற்ற முடியவில்லை. ஆனால், தற்போது அவர் அரைசதங்களை ஒவ்வொரு முறையும் சதங்களாக மாற்றுகிறார் என்றார்.
அண்மையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது, ஜோ ரூட் டெஸ்ட் போட்டிகளில் 12 ஆயிரம் ரன்களைக் கடந்தார். டெஸ்ட் போட்டிகளில் 12,027 ரன்களுடன் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் ஜோ ரூட் 7-வது இடத்தில் உள்ளார். இதுவரை 143 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட் 32 சதங்கள் மற்றும் 63 அரைசதங்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.