ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட்: அயர்லாந்து வெற்றி!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் அயர்லாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் அயர்லாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி ஜூலை 25 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸ் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் முறையே 210 ரன்கள் மற்றும் 197 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
அயர்லாந்து அணி முதல் இன்னிங்ஸில் 250 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன்மூலம், அயர்லாந்துக்கு 158 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
158 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணி முன்வரிசை ஆட்டக்காரர்களின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணி 21 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லோர்கான் டக்கர் மற்றும் ஆண்டி மெக்பிரின் அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினர்.
லோர்கான் டக்கர் 64 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகள் அடங்கும். ஆண்டி மெக்பிரின் 55 ரன்களுடனும் (5 பவுண்டரிகள்), மார்க் அடாய்ர் 24 ரன்களுடனும் (4 பவுண்டரிகள்) களத்தில் இருந்தனர். இறுதியில் அயர்லாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆண்டி மெக்பிரினுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.