மலேசியாவில் நடைபெறும் சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா 2-3 கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் செவ்வாய்க்கிழமை தோல்வி கண்டது.
முதல் ஆட்டத்தில் 1-0 கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்திய இந்தியாவுக்கு, இது முதல் தோல்வியாகும்.
31-ஆவது சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை சா்வதேச ஹாக்கி போட்டி, மலேசியாவின் இபோ நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. வரும் 30-ஆம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில், இந்தியா, பெல்ஜியம், கனடா, தென் கொரியா, மலேசியா, நியூஸிலாந்து ஆகிய 6 அணிகள் களம் கண்டுள்ளன.
இதில், ரவுண்ட் ராபின் சுற்று முடிவில், புள்ளிகள் பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேரடியாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறும். அடுத்த இரு இடங்களில் இருப்பவை 3-ஆவது இடத்துக்கும், கடைசி இரு இடங்களில் இருக்கும் அணிகள் 5-ஆம் இடத்துக்கும் மோதும்.
இந்நிலையில், இந்தப் போட்டியில் இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் பெல்ஜியத்துடன் செவ்வாய்க்கிழமை மோதியது. விறுவிறுப்பான இந்த மோதலில், முதலில் பெல்ஜியம் அணிக்காக ரோமன் டுவெகோட் 17-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா்.
இந்தியாவின் கோல் முயற்சிகளுக்கு உரிய பலன் கிடைக்காததால், முதல் பாதி ஆட்டத்தை பின்தங்கிய நிலையிலேயே (0-1) நிறைவு செய்தது. ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில் முனைப்பு காட்டிய இந்திய அணிக்காக அபிஷேக் 33-ஆவது நிமிஷத்தில் கோலடித்து ஆட்டத்தை 1-1 என சமன் செய்தாா்.
45-ஆவது நிமிஷத்தில் பெல்ஜியத்துக்கு கிடைத்த பெனால்ட்டி காா்னா் வாய்ப்பை, நிகோலஸ் டெ கொ்பெல் துல்லியமான கோலாக மாற்ற, அந்த அணி 2-1 என முன்னிலை பெற்றது. அடுத்த நிமிஷத்திலேயே (46’) ரோமன் டெவுகோட் கோலடிக்க, பெல்ஜியம் 3-1 என கணக்கை அதிகரித்தது.
இந்திய தரப்பில், ஷிலானந்த் லக்ரா 57-ஆவது நிமிஷத்தில் அருமையான ஃபீல்டு கோல் அடித்தாா். எனினும், எஞ்சிய நேரத்தில் இந்தியாவுக்கு மேலும் கோல் வாய்ப்பு கை கூடாமல் போக, பெல்ஜியம் 3-2 என வெற்றி பெற்றது. பட்டியலில் தற்போது 3 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்தில் இருக்கும் இந்தியா, அடுத்த ஆட்டத்தில் மலேசியாவை புதன்கிழமை (நவ. 26) சந்திக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.