துபை விமான நிலைய ட்ரோன் தாக்குதலில் சிக்கிய பிவி சிந்து, பயிற்சியாளர்!
துபை விமான நிலையத்தில் சிக்கிக்கொண்ட இந்திய பாட்மின்டன் வீராங்கனை பிவி சிந்து கூறியதாவது...
இந்தியாவின் பாட்மின்டன் வீராங்கனை பிவி சிந்து, “துபையில் நிலைமை மிகவும் பயமாகவும் பதற்றமாகவும் இருக்கிறது” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையேயான ராணுவத் தாக்குதல்கள் தொடங்கியதையடுத்து மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது.
அமெரிக்க படைத் தளங்களைக் குறிவைத்து அரேபிய வளைகுடாவில் அபு தாபி, துபை, தோஹா, ரியாத் ஆகிய நகரங்களில் வான் வழித் தாக்குதல்களை ஈரான் நடத்தியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால், மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் பர்மிங்கமில் நடைபெறும் ’ஆல் இங்கிலாந்து ஓபன்’ பாட்மின்டன் போட்டியில் பங்கேற்க, துபை வழியாக பயணித்த இந்திய வீராங்கனை பிவி சிந்து தற்போது துபையில் சிக்கியுள்ளார்.
விமான நிலையத்துக்கு அருகில் ட்ரோன் தாக்குதல் நடந்ததால், தான் மிகவும் பயந்துவிட்டதாக பிவி சிந்து கூறியுள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
இங்கு என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதை கடினமாக இருக்கிறது. தலைக்குமேல் செல்லும் இடையூறுகளினால் உண்டாகும் சப்தங்கள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன.
பல விடியோக்கள் வருகின்றன. நிஜமான நிலைமை வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன. துபை எனக்கு மிகவும் பிடித்தமான நகரம். பாதுக்காப்பான இந்த நகரம் தற்போது கடினமாகியுள்ளது.
எனது அணியுடன் துபையில் சிக்கிக்கொண்டேன். எனக்காக விசாரித்தவர்களுக்கு நன்றி. ஈரான் போர் வளர்ந்துகொண்டே வருகிறது.
துபை விமான நிலையம் பெருங்குழப்பமாக இருக்கிறது. இங்கு மக்கள் அனைவரும் சிக்கிக்கொண்டு இருக்கிறார்கள். வாழ்க்கை எவ்வளவு லேசானது என்ற எண்ணம் வருகிறது. அனைவருக்கும் நல்லது நடக்குமென வேண்டிக்கொள்கிறேன் எனப் பதிவிட்டிருந்தார்.
பின்னர், இந்தப் பதிவைப் பகிர்ந்து, “நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம். துபையில் இருக்கும் இந்திய ஆணையர்களுக்கு நன்றி.
சில மணி நேரத்துக்கு முன்பாக நாங்கள் இருக்கும் இடத்துக்கு பக்கத்தில் குண்டுவெடிப்பு நடந்தது. எனது பயிற்சியாளர் அந்தப் புகை, சிதைந்த பாகங்களிடம் இருந்து தப்பித்து ஓடி வந்தார். ஓய்வு எடுத்து வருகிறோம். அனைத்தும் சரியாகும் என காத்திருக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.