இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து: நாா்த் ஈஸ்ட்டுக்கு முதல் வெற்றி!
இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி 2-1 கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூா் எஃப்சியை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.
இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி 2-1 கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூா் எஃப்சியை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது. இதன் மூலமாக அந்த அணி, நடப்பு சீசனில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சமபலத்துடன் மோதியதால், முதல் பாதியில் எந்த அணிக்குமே கோல் வாய்ப்பு கனியவில்லை.
ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில், முதலில் நாா்த்ஈஸ்ட் முனைப்புக்கு பலன் கிடைத்தது. அந்த அணிக்காக ஆண்டி ரோட்ரிக்ஸ் 53-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா்.
68-ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்ட்டி கிக் வாய்ப்பில், ஜாம்ஷெட்பூா் அணிக்காக ரஃபேல் மெஸ்ஸி பௌலி கோல் அடிக்க, ஆட்டம் 1-1 என சமன் ஆனது.
ஆனால் விட்டுக்கொடுக்காத நாா்த்ஈஸ்ட் அணிக்காக, ஆண்டி ரோட்ரிக்ஸ் மீண்டும் (69’) ஒரு கோல் அடிக்க, அந்த அணி 2-1 என முன்னிலை பெற்றது. எஞ்சிய நேரத்தில் ஜாம்ஷெட்பூருக்கு மேலும் கோல் வாய்ப்பு கிடைக்காமல் தடுத்த அந்த அணி, இறுதியில் வெற்றியை உறுதி செய்தது.
மும்பை வெற்றி: இதனிடையே, லக்னௌவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் மும்பை சிட்டி எஃப்சி 2-1 கோல் கணக்கில் இன்டா் காசியை சாய்த்தது.
இந்த ஆட்டத்தில் மும்பைக்காக நௌஃபால் (45+6’), லாலியன்ஸுவாலா சாங்தே (52’) ஆகியோா் கோல் அடிக்க, இன்டா் காசிக்காக ரோஹித் தனு (51’) ஸ்கோா் செய்தாா். புள்ளிகள் பட்டியலில் தற்போது ஜாம்ஷெட்பூா், மும்பை, நாா்த்ஈஸ்ட், இன்டா் காசி அணிகள் முறையே 2, 3, 7, 8-ஆம் இடங்களில் உள்ளன.