கெளதம் கம்பீர் உடனான உறவு மிக நீண்டது : சஞ்சு சாம்சன்
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் உடனான உறவு மிக நீண்டது என சஞ்சு சாம்சன் பேசியது குறித்து...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய தலைமைப் பயிற்சியாளருமான கௌதம் கம்பீர் உடனான உறவு மிக நீண்டது என டி20 உலகக் கோப்பை நாயகன் சஞ்சு சாம்சன் இன்று (மார்ச் 16) தெரிவித்தார்.
கெளதம் கம்பீர் உடனான உறவை வார்த்தைகளால் விவரிக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
Advertisement
அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியில் அதிரடியான ஆட்டத்தால், அணியின் வெற்றிக்கு சஞ்சு சாம்சன் பெரிதும் உதவினார்.
இந்நிலையில், தனது சொந்த மாநிலமான கேரளத்திற்கு வருகைப் புரிந்த சஞ்சு சாம்சனை, மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் நேரில் அழைத்துப் பாராட்டினார். நினைவுப் பரிசுகளும் வழங்கினார்.
ஆளுநருடன் கலந்துரையாடிய பிறகு செய்தியாளர்களுடன் சஞ்சு சாம்சன் பேசியதாவது:
''டி-20 உலகக் கோப்பை முடிந்ததுமே சச்சின் டெண்டுல்கர் எனக்கு தொலைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பினார். மிகவும் உணர்ச்சிகரமான குறுஞ்செய்தி அது. எனக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் இருந்தது.
எனக்கும் கெளதம் கம்பீருக்கும் இடையிலான உறவு மிகவும் பழமையானது. நான் கேகேஆர் அணியில் இருக்கும்போது அவரை முதல்முறையாகச் சந்தித்தேன் என நினைக்கிறேன். அவர் அணியின் கேப்டனாக இருந்தார். தில்லியில் வசித்துவந்தார்.
கெளதம் கம்பீர் இருந்த அகாதெமியிலேயே நானும் கிரிக்கெட் விளையாடினேன். அதனால், அன்று முதல் இன்று வரை அவருடன் மிகவும் உறுதியான பிணைப்பு எனக்கு உண்டு. இதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாது'' எனக் குறிப்பிட்டார்.