உலகக் கோப்பையில் ஹைதி அணியின் சீருடைக்குத் தடை விதித்த ஃபிஃபா!
ஹைதி நாட்டின் உலகக் கோப்பைக்கான சீருடை(ஜெர்ஸி)க்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து...
கால்பந்து உலகக் கோப்பைக்கான ஹைதி நாட்டின் சீருடை (ஜெர்ஸி) அரசியல் காரணங்களுக்காகத் தடை செய்யப்பட்டுள்ளது. புதிய சீருடையை அணிந்து வருமாறு ஃபிஃபா தெரிவித்துள்ளது.
நடப்பு உலகக் கோப்பைக்கான போட்டிகள் ஜூன் 11 முதல் தொடங்கி ஜூலை 19 வரை நடைபெற இருக்கின்றன. முதல்முறையாக 48 அணிகள் பங்கேற்கின்றன. அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன.
குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள ஹைதி அணி தனது சீருடையில் தன்னுடைய நாட்டின் சுதந்திரப் போரைக் குறிப்பிடும் காட்சிகளைப் பதிந்துள்ளது. பிரெஞ்சு காலனி ஆதிக்கத்தை எதிர்த்து ஹைதி மக்கள் ஆகஸ்ட் 21, 1791 முதல் ஜன.1, 1804 வரை போராடினார்கள். இந்தப் போராட்டத்தில் 2 லட்சம் ஹைதி மக்கள் பலியாகினர்.
Advertisement
Advertisement
இந்தப் போராட்டத்தைக் குறிக்கும் வகையில் இடம்பெற்றிருந்த சீருடைக்கு ஃபிஃபா, “மிகவும் அரசியலாக இருப்பதால் புதிய சீருடையுக்கு மாற்றவும்” எனக் கூறியுள்ளது.
“இது அரசியல் நோக்கத்திற்காக வடிவமைக்கப்படவில்லை எனவும் ஹைதியின் வருங்காலத்துக்காக பங்காற்றிய ஒவ்வொரு ஆண், பெண்ணுக்கும் புகழஞ்சலியாக இருக்கவும் இதில் வரும் நீலம் கடலையும் சிவப்பு நாட்டின் பலத்தையும் ஆர்வத்தையும் குறிப்பிடுவதாக வடிவமைக்கப்பட்டது” என சீருடையை வடிவமைத்த சயேதா ஸ்போர்ட்ஸ் தெரிவித்திருந்தது.
அடிமைகளாக இருந்த ஹைதி 1804ல் விடுதலைப் பெற்றது. அடிமைகளாக இருந்து, உலகின் முதல் சுந்தந்திர நாடாக மாறியது. கரீபியனில் இந்த நாடுதான் முதல்முறையாக சுதந்திரம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
ஹைதி தனது முதல் போட்டியில் ஸ்காட்லாந்தை இன்று (ஜூன் 13) எதிர்கொள்கிறது. அடுத்தாக பிரேசில், மொராக்கோ அணியை எதிர்கொள்கிறது.