இந்திய டி20 கேப்டனாக சஞ்சு சாம்சன் வரவேண்டும் - ரவி சாஸ்திரி
வருங்காலத்தில் டி20 கேப்டனாக சஞ்சு சாம்சன் வரவேண்டும் என்று ரவி சாஸ்திரி தெரிவித்தது குறித்து...
வருங்காலத்தில் டி20 கேப்டனாக சஞ்சு சாம்சன் வரவேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்றியதில் நட்சத்திர ஆட்டக்காரராக சஞ்சு சாம்சன் இருந்தார். அவர் இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் கேப்டன்களுக்கான பட்டியலில் முக்கிய போட்டியாளராக இருப்பார் என்று ரவி சாஸ்திரி வலியுறுத்தியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு, இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வென்றது. அத்தொடரில், 31 வயதான சாம்சன் தொடரின் சிறந்த வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Advertisement
இதுகுறித்து பேசிய ரவி சாஸ்திரி, “இன்னும் சில ஆண்டுகளில் சூர்ய குமார் யாதவின் ஆட்டத்தைப் பொறுத்து, 2028 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்கு ஒரு புதிய கேப்டனை தேடும் கட்டாயம் ஏற்படலாம்.
இந்த கேப்டனுக்கான தேடலில் சஞ்சு சாம்சன் முன்னணியில் இருப்பார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சிறந்த கேப்டன்சியை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.
எனவே, அவர் கண்டிப்பாக உலக்கோப்பைக்கான தொடக்க ஆட்டக்காரர் பட்டியலில் இடம்பெறுவார். இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் அவரின் ஆட்டம் மிகச் சிறப்பாக அமையும் என்று நான் நம்புகிறேன்.
கடந்த டி20 உலகக் கோப்பையில் தனி ஒருவராக இந்தியாவின் வெற்றிகளை ஏறக்குறைய வென்று கொடுத்த காலிறுதிப் போட்டிகள், அரையிறுதிப் போட்டிகள், இறுதிப் போட்டி என அனைத்திலும் அவர் காட்டிய திறமைக்குப் பிறகு, இந்த சீசனில் தற்போது ஐபிஎல் தொடரில் அவர் வெளிப்படுத்தும் முதிர்ச்சியும், என்னைப் பொறுத்தவரை, எதிர்கால கேப்டன்சிக்கு அவர் ஒரு தெளிவான உதாரணம் என்பதை உணர்த்துகிறது” எனத் தெரிவித்தார்.