கடலூர், ஜூலை 4: கிராமப் புற வளர்ச்சித் திட்டப் பணிகளில் போலி ஆவணம் தயாரித்தல், பணம் கையாடல் உள்ளிட்ட முறைகேடுகள் செய்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் இருவரைப் பதவி நீக்கம் செய்து, கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் உத்தரவிட்டு உள்ளனர்.
ஆட்சியர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மேல்புவனகிரி ஒன்றியம் கிளாவடி நத்தம் ஊராட்சி மன்றத் தலைவர் எம்.குமார், நல்லூர் ஒன்றியம் இறையூர் ஊராட்சி மன்றத் தலைவர் க.ராமலிங்கம் ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
நீதிமன்றக் காவலில் இருந்தோர், தீ விபத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் இறந்தவர், குற்ற வழக்கில் கைதானவர்களை ஜாமீனில் எடுக்கச் சென்றோர் ஆகியோரது பெயர்களைத் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வருகைப் பதிவேட்டில் போலியாகச் சேர்த்து, ஊராட்சி மன்றத் தலைவர் எம்.குமார் முறைகேடு புரிந்துள்ளார்.
மற்றவர்களின் கையெழுத்தை போலியாக இட்டுள்ளதாலும், போலி ஆவணம் தயாரித்து பணம் கையாடல் செய்தது மட்டுமின்றி, பதவியைத் தவறாக பயன்படுத்தி அரசுத் திட்டத்தில் முறைகேடு செய்துள்ளார் குமார்.
இறையூர் ஊராட்சி நிதியில் செலவினச் சீட்டுகள், மதிப்பீடு, அளவுப் புத்தகம், மற்றும் எவ்வித ஆவணமும் இல்லாமல் பணம் எடுத்து இருக்கிறார், ஊராட்சி மன்றத் தலைவர் ராமலிங்கம்.
அவர் அரசாணைக்கு முரணாக தன்னிச்சையாகச் செயல்பட்டு மிகைச் செலவினம் செய்து, ஊராட்சிக்கு நிதி இழப்பை ஏற்படுத்தி இருக்கிறார். ஊராட்சி நிதியைத் தன் விருப்பம்போல் எடுத்து கையாடல் செய்து இருக்கிறார் ராமலிங்கம். இவ்விரு ஊராட்சி மன்றத் தலைவர்களும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205 உள்பிரிவு 11-ல், மாவட்ட ஆட்சிருக்கு அளிக்கப்பட்டு உள்ள அதிகாரத்தின்படி, பதவி நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டு உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.