தமிழ்நாடு

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் கட்டணத்தை நிர்ணயிக்க கமிட்டி: அரசு இன்று அறிவிக்கிறது

சென்னை, ஜூலை 14: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் கட்டணத்தை நிர்ணயிக்கக் கமிட்டி அமைக்கப்பட உள்ளது.  இதுதொடர்பான அறிவிப்பு, பேரவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப

ஆர். ஆதித்தன்

சென்னை, ஜூலை 14: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் கட்டணத்தை நிர்ணயிக்கக் கமிட்டி அமைக்கப்பட உள்ளது.

 இதுதொடர்பான அறிவிப்பு, பேரவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட உள்ள தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை முறைப்படுத்தும் சட்டமசோதாவில் இடம்பெறும் என்று தெரிகிறது.

 தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகளில் அதிக கல்விக் கட்டணம், நன்கொடை வசூல் ஆகியவை தொடர்பாக அரசுக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால், அரசால் தனியார் பள்ளிகள் மீது ஓரளவுதான் நடவடிக்கை எடுக்க முடிந்தது.

 அரசு நடவடிக்கை எடுக்க முடியாததற்கு "சுயநிதி கல்வி நிறுவனங்கள் தாங்களே கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம்' என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பும், 1976-ல் நிறைவேறிய தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்துதல் சட்டமும் காரணம் என்று கூறப்படுகிறது. இந்தச் சட்டம் நிறைவேறிய பிறகு தனியார் பள்ளிகள் தங்களின் இஷ்டம்போல கட்டணம் நிர்ணயித்து மாணவர் சேர்க்கை நடத்தி வந்தன. பள்ளி உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர் நியமனம் மற்றும் ஊதியம், மாணவர் சேர்க்கை போன்ற விஷயங்களில் அரசு தலையிட முடியாதநிலை உள்ளது.

 சிட்டிபாபு குழு: இதைத்தொடர்ந்து தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க சிட்டிபாபு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இதற்கிடையில், கர்நாடகத்தைச் சேர்ந்த "பய்' ஃபவுண்டேஷன் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. அந்த வழக்கில், "சுயநிதி கல்வி நிறுவனங்கள் தாங்களே கட்டணத்தை நிர்ணயித்து கொள்ளலாம்' என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனால், சிட்டிபாபு குழு பரிந்துரையை அரசு ஏற்க முடியாத நிலை ஏற்பட்டது.

 சட்ட மசோதா: இந்நிலையில், தனியார் பள்ளிகளில் அதிக கல்விக்கட்டணம் வசூல் செய்வது தொடர்பான பிரச்னை விசுவரூபம் எடுத்தது. இந்தப் பிரச்னை சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. அப்போது பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ""தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணத்தை முறைப்படுத்த சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்படும்'' என்று அறிவித்தார்.

 முன்னதாக தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணத்தை முறைப்படுத்த சட்ட மசோதா என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த சட்ட மசோதாவில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளும் சேர்க்கப்பட்டுள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறையின் உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 ஏனெனில், அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது முறையான நடவடிக்கை எடுக்க முடியும். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. அதனால் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இந்தச் சட்டம் வழிவகை செய்யும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

 கட்டணத்தை நிர்ணயிக்கக் கமிட்டி: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க புதிய கமிட்டி அமைக்கப்பட உள்ளது. இந்தக் கமிட்டி நிர்ணயிக்கும் கட்டணத்தை மட்டும்தான் இனி தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டும். இல்லையெனில் சட்ட ரீதியான நடவடிக்கையைச் சந்திக்க வேண்டியிருக்கும். அங்கீகாரத்தையும் இழக்க நேரிடும் என்று பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 36 புதிய மெட்ரிக் பள்ளிகளுக்கு அனுமதி: இந்த ஆண்டில் புதியதாக 36 தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சுமார் 3,619 பள்ளிகள் உள்ளன. தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ள 36 மெட்ரிக் பள்ளிகளுடன் சேர்த்து புதிய பள்ளிகளின் எண்ணிக்கை 3,655 ஆக உயர்ந்துள்ளது.

 அதேபோல தமிழகத்தில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT