பொள்ளாச்சி : அரசின் நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டும் நிர்வாக அனுமதி தரப்படாததால், கான்டூர் கால்வாய் சீரமைப்புச் செலவு சுமார் ரூ.40 கோடி அதிகரித்துள்ளது. சீரமைப்பு பணிகள் எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பில் 4 லட்சம் ஏக்கர் பாசன விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
பரம்பிக்குளம்- ஆழியாறு பாசனத் திட்டத்தின் மிகமுக்கிய அங்கம் கான்டூர் கால்வாய். அப்பர் நீராறு, லோயர் நீராறு, சோலையாறு, பெருவாரிப்பள்ளம், தூணக்கடவு உள்ளிட்ட அணைகளில் இருந்து கிடைக்கும் தண்ணீர், சர்க்கார்பதியில் மின்னுற்பத்திக்குப் பிறகு கான்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்குச் சென்று அங்கிருந்து விவசாயத்துக்குச் செல்கிறது.
தொடரும் சேதம்
சர்க்கார்பதியில் இருந்து திருமூர்த்தி அணை வரை அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்லும் கான்டூர் கால்வாயின் மொத்த நீளம் 50 கி.மீ. வனப்பகுதிக்குள் சில இடங்களில் மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட சுரங்கப் பாதைக்குள் கால்வாய் செல்கிறது.
இயற்கைச் சீற்றங்களின்போதும் அதிக மழைப் பொழிவின்போதும் கான்டூர் கால்வாய் சேதமாவது வழக்கம். இதனால் அவ்வப்போது கான்டூர் கால்வாய் சீரமைக்கப்படுவதும் வாடிக்கையாகி விட்டது.
இப்போதுள்ள நிலையில் கான்டூர் கால்வாயில் தண்ணீர் சேதம் சுமார் 20 சதவீதம். இதைக் குறைப்பதற்குத் தீவிர முயற்சி நடக்கிறது. கட்டி முடிக்கப்பட்டதில் இருந்து இன்று வரை சுமார் 40 ஆண்டுகளில் கான்டூர் கால்வாய் சீரமைப்புக்குப் பல கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சேதம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
திட்டச் செலவு அதிகரிப்பு
இந்த நிலையில் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்ற தமிழக அரசு, நிதி நிலை அறிக்கையில் ரூ.127 கோடியை கான்டூர் கால்வாய் சீரமைப்புக்கு ஒதுக்குவதாக அறிவித்தது. அரசு அறிவித்துச் சுமார் 6 மாதங்களாகியும் இதற்கு நிர்வாக அனுமதியளிக்கப்படவில்லை.
இதனால் திட்டச் செலவு ரூ.168 கோடியாக உயர்ந்துள்ளது.
நிர்வாக அனுமதிக்குப் பின் தொழில்நுட்ப அனுமதியளிக்க வேண்டும். இதன்பின் டெண்டர் விடப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாக சுமார் 45 நாள்களாகும். இப்போதுள்ளதை விட கட்டுமானப் பொருள்களின் விலை கண்டிப்பாக மேலும் கூடுதலாகும். அப்போது, கான்டூர் கால்வாய் சீரமைப்புப் பணிக்குச் சுமார் ரூ.200 கோடி தேவைப்படும் என்கின்றனர் பொதுப் பணித்துறையினர்.
விவசாயிகள் ஏமாற்றம்
இதுகுறித்து, திருமூர்த்தி அணை திட்டக்குழுத் தலைவர் மெடிக்கல் கே.பரமசிவம் கூறியது:
கான்டூர் கால்வாய் சீரமைப்புப் பணிக்காக ரூ.127 கோடியை நிதி நிலை அறிக்கையில் அறிவித்தது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் இன்று வரை அரசு நிர்வாக அனுமதியளிக்காதது விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதேநிலை தொடர்ந்தால் திட்டச் செலவு மேலும் கூடும்.
அரசு தாமதிக்காமல் கான்டூர் கால்வாய் திட்டத்துக்கு அனுமதியளித்து விரைவில் பணிகளைத் துவக்க வேண்டும். அப்போதுதான் தண்ணீர் சேதம் குறைந்து விவசாயத்துக்குக் கூடுதலாகத் தண்ணீர் கிடைக்கும். அரசு ஏற்படுத்தும் காலதாமதத்தால் திட்டச் செலவு தொடர்ந்து கூடிக் கொண்டிருகிறது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.