ஈரோடு : மும்முனை மின்சாரம் கேட்டு விண்ணப்பித்துள்ள கோபி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கால் நூற்றாண்டு காலம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், கோபி பகுதியில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்துள்ள விவசாயிகள் இணைப்பு கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். விவசாயத்திற்கு வழங்கப்படும் மும்முனை மின் இணைப்பை பொறுத்தவரை சாதாரண திட்டம், ரூ.10 ஆயிரம், ரூ.25 ஆயிரம் மற்றும் ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை செலுத்தி மின் இணைப்பு பெறும் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. மின் இணைப்பு கோரும் விவசாயிகளின் விண்ணப்பங்களை மின்வாரிய இளநிலை பொறியாளர் பரிசீலனை செய்த பிறகு
விவசாயிகளின் விருப்பத்தின் அடிப்படையில் இலவச அல்லது கட்டண மின் இணைப்பு திட்டத்திற்கு மாற்றப்படும்.
கோபி மின் பகிர்மான வட்டத்திற்குள்பட்ட கோபி, சத்தியமங்கலம் மற்றும் பவானி பகுதிகளில் இலவச திட்டத்தில் மின் இணைப்பு கோரி பதிவு செய்து சுமார் 8000 விவசாயிகள் காத்திருக்கின்றனர். இத்திட்டத்தில் இணைப்பு கேட்டு கடந்த 1991-ம் ஆண்டு பதிவு செய்துள்ளவர்களுக்கு தற்போது இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதுபோல் ரூ.10 ஆயிரம் வைப்புத்தொகை திட்டத்தில் கடந்த 1994-ம் ஆண்டில் பதிவு செய்துள்ளவர்களுக்கு நடப்பாண்டில்தான் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. ரூ.25 ஆயிரம் வைப்புத்தொகை திட்டத்தில் பதிவு செய்துள்ளவர்களில் கடந்த 2007-ம் ஆண்டு வரையிலும், ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை திட்டத்தில் பதிவு செய்துள்ளவர்களில் கடந்த 2008-ம் ஆண்டு வரையிலும் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இலவச மற்றும் கட்டண திட்டங்களில் மின் இணைப்பு கேட்டு கோபி மின் பகிர்மான வட்டத்தில் மட்டும் ஏறத்தாழ 15 ஆயிரம் விவசாயிகள் பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். இலவச மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ள விவசாயிகள் சிலர் தற்போது உயிருடன் இல்லை. ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை திட்டத்தில் இணைப்பு கோரும் விவசாயிகளுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்புவரை, விண்ணப்பம் அளித்த மூன்று மாதங்களுக்குள் இணைப்பு வழங்கப்பட்டது.
கடந்த 3 ஆண்டுகளாக கடுமையான மின்வெட்டு தொடரும் நிலையில், இலவச கலர் டிவி வழங்கப்பட்டுள்ள குடிசைப் பகுதிகளுக்கு போர்க்கால அடிப்படையில் மின் இணைப்பு வழங்க வேண்டும் என மின்வாரியத்திற்கு அரசு வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாகவும், இதனால்தான் விவசாய மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து மின்வாரிய உயரதிகாரி ஒருவர் தெரிவித்தது: விவசாய மின் இணைப்புகள் வழங்குவதில் அரசு விதிமுறைகள் முழுமையாகப் பின்பற்றப்படுகின்றன. ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை திட்டத்தில் இணைப்பு கோருபவர்களுக்கு 6 மாதங்களுக்குள் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. கோபி மின் பகிர்மான வட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு 200 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. பணியாளர் பற்றாக்குறை உள்ளிட்ட ஒரு சில நிர்வாக காரணங்களினால் சில இடங்களில் சிறிது காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.