முகப்பு
தமிழ்நாடு

தமிழ் நூல்கள் வாங்க ஆங்கிலத்தில் விண்ணப்பம்

சென்னை, நவ. 3: தமிழ் நூல்கள் வாங்குவதற்கு ஆங்கிலத்தில் விண்ணப்பம்  அனுப்பி வைக்கப்பட்டதற்கு, பொது நூலகத்துறை மீது பதிப்பாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.  தமிழ்நாடு பொது நூலகத்துறை சா

Updated On : 20 செப்டம்பர், 2012 at 8:27 PM
பகிர்:
Updated On : 28 டிசம்பர், 2023 at 7:28 PM

சென்னை, நவ. 3: தமிழ் நூல்கள் வாங்குவதற்கு ஆங்கிலத்தில் விண்ணப்பம்

 அனுப்பி வைக்கப்பட்டதற்கு, பொது நூலகத்துறை மீது பதிப்பாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

 தமிழ்நாடு பொது நூலகத்துறை சார்பில், கடந்த 2009-ல் வெளிவந்த தமிழ் நூல்களை பதிப்பாளர்களிடம் இருந்து வாங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஒவ்வொரு நூலின் தலைப்புக்கும் தலா ரூ.100 கட்டணம் செலுத்தி பதிப்பாளர்கள் பதிவு செய்ய பொது நூலகத்துறை அறிவித்திருந்தது.

Advertisement

 இதற்கிடையில் நூல்கள் குறித்த பக்க அளவு உள்ளிட்ட விவரங்களை அளிக்கும்படி, பொது நூலகத்துறை சார்பில் பதிப்பாளர்களுக்கு விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

 தமிழ் நூல்களை வாங்குவதற்கான இந்த விண்ணப்பங்கள் தமிழில் இல்லாமல், ஆங்கிலத்தில் இருப்பது தமிழ் ஆர்வலர்களையும், தமிழ் பதிப்பாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 இதுகுறித்து பதிப்பாளர்கள் கூறியது:

 தமிழ் நூல்களை வாங்குவதற்கான இந்த விண்ணப்பங்கள் ஆங்கிலத்தில் உள்ளன. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடும் நடத்தியாகிவிட்டது. அதைத்தொடர்ந்து உலகத்தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகமும் கட்டிமுடித்து, அதில் லட்சக்கணக்கான தமிழ் நூல்களை அரசு வாங்கி வைத்துள்ளது.

 தமிழ் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை என அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், தமிழ் நூல்களை வாங்குவதற்கு ஆங்கிலத்தில் விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது எங்களைப் போன்ற தமிழ் பற்று கொண்ட பதிப்பாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 ஆனால், நூல்களை சமர்ப்பிப்பதற்கான நெறிமுறைகள் குறித்த விவரம் ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் உள்ளன. இதுபோல நூல்கள் குறித்த விவரம் அடங்கிய விண்ணப்பத்தையும் தமிழில் அனுப்ப வேண்டும். நவம்பர் 15-ம் தேதிக்குள் தங்களது நூல்கள் குறித்த விவர விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

 இதுதொடர்பாக பொது நூலகத்துறை அதிகாரிகள் கூறியது:

 பொது நூலகத்துறை சார்பில் பல்வேறு திட்டங்களின் மூலம் பதிப்பாளர்களிடமிருந்து நூல்கள் வாங்கப்படுகின்றன. இந்த விவரங்களை மத்திய அரசுக்கு ஆங்கிலத்தில் தெரிவிக்க வேண்டிவுள்ளது.

 அதே போல ராஜாராம் மோகன்ராய் நூலக அறக்கட்டளை சார்பில் நூல்கள் வாங்க ரூ.4 கோடி தமிழக அரசுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் என்னென்ன நூல்கள் வாங்குகிறோம் என்ற தகவல்களை, அந்த அறக்கட்டளைக்கு ஆங்கிலத்தில் அனுப்ப வேண்டும் என்ற ரீதியிலேயே நூல்கள் குறித்த விண்ணப்பத்தை ஆங்கிலத்தில் அனுப்பி உள்ளோம். இந்த விண்ணப்பங்கள் அடுத்த ஆண்டில் தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிடப்படும்.

 நூலகத் துறையில் ஆன்லைன் முறை சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முறை நூலகத் துறை சார்பில், நூல்கள் விவரம் குறித்த விண்ணப்பங்கள், பதிப்பாளர்களுக்கு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த முறை பதிப்பாளர்களே ஆன்லைனில் சென்று விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.